டெல்லியில் நடந்த பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இஸ்ரேல்-அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதல் விவகாரம் கடுமையாக பேசப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் ரகசிய UAE பயணம் குறித்து ஈரான் கேள்வி எழுப்ப, UAE மறுத்தது. இதனால் இரு தரப்பும் மோதிக்கொண்ட நிலையில், அமெரிக்க ராணுவ ஆக்கிரமிப்புக்கு UAE ஆதரவு அளித்ததாக ஈரான் குற்றம் சாட்டியது.
பொருளாதார ரீதியாக வளரும் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கூட்டமைப்பில் இந்தோனேசியா நிரந்தர உறுப்பினர் நாடாக இணைந்தது. இதன் காரணமாக அமைப்பின் பெயர் பிரிக்ஸ் பிளஸ் என மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இந்த பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக இணைந்தன. உலக மக்கள் தொகையில் சுமார் 45% பேர் இந்த அமைப்பில் உள்ள நாடுகளில் வசிக்கும் நிலையில், இது மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படுகிறது.
இந்த சூழலில் டெல்லியில் பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல் குறித்த விவாதம் முக்கியத்துவம் பெற்றது.
ஈரானுடனான போருக்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு ரகசியப் பயணம் மேற்கொண்டதாக இஸ்ரேல் கூறியிருந்த நிலையில், அது குறித்து இந்த கூட்டத்தில் ஈரான் கேள்வி எழுப்பியிருந்தது.
ஆனால் இதனை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுத்த நிலையில், ஈரான் அமைச்சர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது கடுமையான கருத்துக்களை முன்வைத்ததாக BBC நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸை தாக்கியதாக விமர்சனங்கள் முவைக்கப்பட்ட நிலையில், அதற்கு ஈரான் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ ஆக்கிரமிப்பை ஆதரித்து, அதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதவியதாக ஈரான் குற்றம் சாட்டியது. மேலும், ஈரானுக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எந்த தார்மீக அல்லது சட்டபூர்வமான உரிமையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு இல்லை என்றும், அமெரிக்காவுக்கு ஆதரவு கொடுத்ததாலே அந்நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது என்றும் ஈரான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.