உலகம்

வெளிநாடுகளுக்கு செல்ல இரட்டை சகோதரிகள் செய்த தில்லாலங்கடி.. சிக்கியது எப்படி?

JananiGovindhan

இரட்டையர்களாக இருப்பவர்களை பெற்றோர்களை தவிர வேறு எவராலும் சரியாக அடையாளம் கண்டுவிட முடியாது என்பது சீனாவில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் தெளிவாகியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் தங்களது ஒத்த அடையாளத்தை வைத்து கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமானம் மூலம் சென்று வந்திருப்பது அண்மையில் தெரிய வந்திருக்கிறது. வடக்கு சீனாவின் ஹார்பின் நகரத்தைச் சேர்ந்தவர்கள் Zhou Mouhong மற்றும் Zhou Mouwei சகோதரிகள். இவர்களில் ஜோ ஹாங்கின் கணவர் ஜப்பானை சேர்ந்தவராவர்.

கணவருடன் ஜப்பான் செல்வதற்காக விசாவுக்கு பல முறை விண்ணப்பித்தும் ஹாங்கிற்கு விசா கிடைத்தபாடில்லை. இதனால் கவலையுற்ற ஹாங் தன்னுடைய இரட்டை சகோதாரியான ஜோ வெய்யின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை வைத்து தனது கணவருடன் ஹாங் ஜப்பான் சென்றிருக்கிறார்.

இந்த ஐடியா ஒழுங்காக வேலை செய்ததால் இரட்டையர்கள் இருவரும் இதையே வேலையாக கொண்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றியிருக்கிறார்கள். அதன்படி இருவரும் தங்களது உருவ ஒற்றுமையை வைத்து சீனாவில் இருந்து ஜப்பான், ரஷ்யா, தாய்லாந்து என பல நாடுகளுக்கு 30க்கும் அதிகமான முறை சென்று வந்திருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது கணவர் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பியதால் ஜோ ஹாங் அவருடன் செல்ல முற்பட்டிருக்கிறார். அப்போதுதான் இரட்டை சகோதரிகளின் தில்லுமுல்லு இமிகிரேஷன் நிர்வாகத் துறையைச் சேர்ந்த போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து கடந்த மே மாதத்தின் போது சீனா திரும்பிய நிலையில் அவர்களை கைது செய்து விசாரித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் எப்போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது, எப்படி போலீசார் அந்த இரட்டையர்களை கைது செய்தார்கள் என்பது குறித்து எந்த தெளிவான விவரமும் வெளியிடப்படவில்லை என சீனாவின் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இரட்டையர்களின் இந்த மோசடி வேலை குறித்து அறிந்த நெட்டிசன்கள் அதிர்ந்து போய், ”பள்ளித் தேர்வுகளை எனக்கு பதிலாக என்னுடைய இரட்டையர் எழுத வேண்டும் என எப்போதும் கனவு காண்பேன்” என பதிவிட்டிருக்கிறார்.

இதுபோக, அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் இருந்தும் இந்த மோசடி எப்படி தெரியாமல் போனது? நம்ப முடியவில்லை. கைரேகை சோதனை கூடவா செய்யாமல் அனுப்பி வைத்தார்கள்? எனவும் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

ALSO READ: