உலகளாவிய பத்திர விற்பனைக்கு மத்தியில் கருவூல பத்திர கொள்முதல்களை சீனாவின் மக்கள் வங்கி (People's Bank of China - PBOC) முதன்முறையாக தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றதிலிருந்து சீனாவின் யுவான் கரன்சியானது சரிவைக்கண்டு வருகிறது. இதனால் பத்திர வருவாயில் தொடர்ந்து இறக்கம் இருக்கும் என அந்நாட்டு ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஆகவே சரிந்து வரும் யுவான் கரன்சியை பாதுகாக்க கருவூலப்பத்திர கொள்முதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீனாவின் மத்திய வங்கி நேற்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் பத்திரங்களை அதிகம் வாங்கும் நாடாக சீனா உருவெடுத்துள்ள நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை அமெரிக்கப் பொருளாதாரம் முழுவதும் அதிர்வலைகளை அனுப்புகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கையால் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது அதன் வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய நாணயக் கொள்கையின் பாதையை மாற்றும். இதனால், உலகளாவிய பங்கு சந்தை ஏற்ற இறக்கத்தை காணலாம்.
சீனாவின் இந்த முடிவு எதற்காக?
கடந்த செப்டம்பரில் இருந்து யுவான் ஏறக்குறைய 5% வீழ்ச்சியடைந்துள்ளது. ட்ரம்பின் புதிய வர்த்தகக் கட்டணங்களின் அச்சுறுத்தல்கள், சீனப் பொருளாதாரத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்ற கவலையின் காரணமாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஷாங்காயில் உள்ள Shanghai Anfang Private Fund Co இன் ஆராய்ச்சி இயக்குனர் Huang Xuefeng, “சீனாவின் பங்கு சந்தையில் முதலீட்டு வாய்ப்புகள் பற்றாக்குறையாக இருப்பதால் பத்திர வீழ்ச்சி தொடரும் என்று கணித்துள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.
பத்திரங்கள் மட்டுமின்றி, PBOC பணப்புழக்கத்தை நிர்வகிப்பதற்கான பல்வேறு கருவிகளை ஆராய்ந்து வருகிறது, இதில் Direct reverse repositories, தற்காலிக சேமிப்புகள் மற்றும் நடுத்தர கால கடன் வழங்கும் வசதிகள் ஆகியவற்றையும் கவனித்துவருகிறது. இதில், தற்காலிக கருவூல பத்திர கொள்முதல் இடைநிறுத்தம் அதன் பணவியல் கொள்கையை மறுசீரமைப்பதற்கான ஒரு பகுதியாக இருக்கலாம்.
நிலையான பத்திர சந்தையை பராமரிக்கவும், பணப்புழக்கத்தை நிர்வகிக்கவும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும் PBOC இன் இந்த முயற்சியானது முக்கியமானதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர்.