சுசிர் பாலாஜி எக்ஸ் தளம்
உலகம்

OpenAI மீது குற்றஞ்சாட்டிய இந்திய ஆராய்ச்சியாளரின் மர்ம மரணம்.. வழக்கை முடித்துவைத்த போலீஸ்!

OpenAI மீது குற்றஞ்சாட்டிய இந்திய ஆராய்ச்சியாளர் சுசிர் பாலாஜியின் மரணம், தற்கொலைதான் என போலீசார் கூறி வழக்கை முறைப்படி முடித்து வைத்துள்ளனர்.

Prakash J

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 2021இல் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற இந்தியாவைச் சேர்ந்த சுசீர் பாலாஜி (26), அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (OpenAI) நிறுவனத்தில், கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார். மேலும், ChatGPT-யை உருவாக்கிய குழுவில் முக்கிய அங்கமாகவும் இருந்தார். இதுதவிர WebGPT மற்றும் GPT-4 போன்ற பிற திட்டங்களிலும் முக்கியப் பங்காற்றியிருந்தார்.

அந்தப் பணியில் இருந்து வெளியேறியபிறகு, காப்புரிமை தரவை OpenAI நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தியாகக் குற்றம்சாட்டியிருந்தார். அதில், சாட்ஜிபிடிக்கு பயிற்சியளிக்க வணிகா்கள் மற்றும் தொழிலதிபா்களின் தரவுகள் பயன்படுத்தப்படுகிறது எனக் குற்றஞ்சாட்டியிருந்தாா். மேலும், சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் தொழில்நுட்பத்தை தாம் ஊக்குவிக்க விரும்பவில்லை என்பதால், ஓபன்ஏஐ நிறுவனத்தில் இருந்து விலகியதாக, சுசிா் பாலாஜி தெரிவித்திருந்தார்.

open ai

மறுபுறம், காப்புரிமை பெறப்பட்ட தங்களின் உருவாக்கங்களை திருடி ஓபன்ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடியை தயாா் செய்வதாக பத்திரிகையாளா்கள், கணினிப் பொறியாளா்கள் உள்ளிட்டோா் அமெரிக்காவில் வழக்கு தொடா்ந்தனா். இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்த விசாரணையில், அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். எனினும், இவ்விவகாரம் உலக அளவில் பேசுபொருளானது. சுசீர் பாலாஜியின் மரணம் குறித்து, ஸ்பேஸ்எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கும் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். அதேநேரத்தில், இந்த மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த காவல் துறையினரும், மருத்துவ அதிகாரிகளும், முழுமையாக விசாரணை நடத்தியதில், சுசிர் பாலாஜியின் மரணம் தற்கொலைதான் எனக் கூறி வழக்கை முறைப்படி முடித்து வைத்துள்ளனர். அவர் தனது நெற்றியில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும், மாறாக, அவரை யாரேனும் கொலை செய்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் மருத்துவ ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சுசிர் பாலாஜி

இதனை ஏற்றுக்கொள்ளாத, சுசிர் பாலாஜியின் பெற்றோர், சம்பவம் நடந்த கட்டடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கூட காவல்துறையினர் ஆய்வு செய்யாமல், விசாரணையை முடித்துவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள், “காவல் துறையினரிடம் விசாரணை அறிக்கையை கோரியிருக்கிறோம். எங்களுக்கு நேர்மையான விசாரணைதான் தேவை. நிறுவனத்துக்கு எதிராகக் குற்றம்சாட்டியதால்தான் என் மகன் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது மரணத்துக்குப் பிறகு, அந்த நிறுவனத்துக்கு எதிராக சில ஆவணங்கள் காணாமல் போயிருக்கின்றன” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.