பந்துல குணவர்தன
பந்துல குணவர்தன Twitter
உலகம்

Lyca நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட இலங்கை அரசு தொலைக்காட்சி சேவை! என்ன காரணம்?

PT WEB

இலங்கையில் தேசிய தொலைக்காட்சியின் பணிப்பாளர் சபையின் தீர்மானத்திற்கேற்ப, இலங்கையின் அரசு தொலைக்காட்சியான ‘Channel Eye’-ன் ஒளிபரப்பு நேரம் குறுகிய காலத்திற்கு லைக்கா நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதை இலங்கையின் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதிசெய்துள்ளார்.

இலங்கையின் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன இதுகுறித்து கூறுகையில், “Channel Eye ஒளிபரப்பு நேரம், மாதம் 25 மில்லியன் ரூபாய் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியாதளவில் பெரும் நஷ்டத்தில் Channel Eye தொலைக்காட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது.

Channel Eye

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு Channel Eye நிறுவனம் தள்ளப்பட்டதன் காரணமாக, ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் அதனை புதிய தலைவரிடம் ஒப்படைத்துள்ளோம். இந்த கொடுக்கல் வாங்கலுக்கு அமைச்சரவையின் அனுமதி தேவையில்லை. எனது அனுமதியுடன் அதனை குத்தகைக்கு வழங்கியுள்ளனர். Channel Eye தொடர்பான வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு, அதன் நன்மையை கருதி, குறுகிய காலத்திற்கு அதனை லைக்கா நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை கூடிய அமைச்சரவையில் சேனல் ஐ தொலைக்காட்சியை குத்தகை அடிப்படையில் லைகா நிறுவனத்திற்கு வழங்க முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை, அமைச்சரவை நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.