மேற்காசியப் போர் முடிவுக்கு வந்தாலும் அதன் பலன் சாமானிய மக்களை எட்ட சில மாதங்களுக்கு மேல் ஆகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். ஹார்முஸ் நீரிணையில் ஆயிரக்கணக்கான கப்பல்கள் சிக்கியுள்ள நிலையில், அவை வெளியே வந்து உரிய இடங்களுக்குச் செல்ல சில வாரங்களாவது ஆகும். மேலும் ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பானது என கப்பல் நிறுவனங்களும் காப்பீட்டு நிறுவனங்களும் திட்டவட்டமாக உறுதிசெய்த பின்னரே புதிய கப்பல்கள் அதன் வழியே செல்லமுடியும்.
இவை ஒருபுறம் இருக்க, மறுபுறம் போரால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் உற்பத்தியை தொடங்கவும் சில வாரங்கள் பிடிக்கும். ஈராக்கில் இதற்கு ஓராண்டுகூட ஆகலாம் எனக் கூறப்படுகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் அது நிலையானதா என்பதை ஓரிரு மாதங்கள் காத்திருந்து உறுதிசெய்த பின்னரே நிறுவனங்கள் தங்கள் பணியை முழுவீச்சில் தொடங்கும். இதுபோன்ற காரணங்களால் எரிபொருள் உற்பத்தி, விநியோகம் சீரடைந்து கச்சா எண்ணெய் விலை குறைய சில மாதங்களாவது ஆகும் எனத் தெரிகிறது.