உலகம்

ஜமால் கஷோகி கொலை : மரண தண்டனை வழங்க வேண்டும் என வாதம்

webteam

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டவழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சவுதி அரேபியா அட்டார்னி ஜெனரல் வாதிட்டார்.

சவுதி மன்னர், சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’பத்திரிகையில் எழுதி வந்தவர், ஜமால் கஷோகி (59). தனது காதலியை திருமணம் செய்து கொள்வதற்கா‌க ஜமால் கஷோகி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல் சென்றிருந்தார்.அப்போது முதல் மனைவியை விவகாரத்து செய்ததற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்றார். சவுதி தூதரகத்துக்கு சென்ற சவுதி பத்திரிகையாளர் கஷோகி அதற்குப் பின் திரும்பி வரவில்லை. சுமார் 18 நாட்களுக்குப் பிறகே, அவர் தூதரகத்துக்குள் கொல்லப்பட்டதாக துருக்கி அரசு தெரிவித்தது.

கஷோகியின் உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து ஐந்து சூட்கேஸ்களில் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் சவுதி தூதரக அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் இருந்த கிணற்றில் அவரது உடல் மீட்கப்பட்ட விவரமும் தெரியவந்தது. இந்தச் சூழலில், கஷோகி கொல்லப்பட்டது தொடர்பாக துருக்கி அரசு விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் ஜமால் கஷோகி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் ரியாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில் 5 பேருக்குமரண தண்டனை விதிக்க வேண்டும் என அட்டார்னி ஜெனரல் வாதிட்டார். மேலும் முதலில் தூதரகத்திலேயே அவர் கொல்லப்பட்ட்தாக கூறியதை மறுத்த சவுதி அரேபியா பின்னர் அதனை ஒப்புக் கொண்ட்து. இதனால் சர்வதேசநெருக்கடி சந்தித்த சவுதி அரேபியா பல உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தது. ஆனால் இதுவரை ஜமால் கஷோகியின் உடல் கிடைக்காத நிலையில் அமிலத்தில் அவரது உடல் கரைக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.