கனடா நாட்டின் பிரதமராக இருப்பவர், ஜஸ்டின் ட்ரூடோ. அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்தது. இதையடுத்து அவருக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. தவிர அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மூலமும் நெருக்கடிகை எதிர்கொண்டு வருகிறார். இதனால், உள்நாட்டு அரசியலில் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் ட்ரூடோவின் அமைச்சரவையில் இருந்து துணை பிரதமரும், நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தவிர, ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சிகளும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அவருக்கு மிகக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், அவர் தனது ராஜினாமாவை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரூடோ உடனடியாக பதவியிலிருந்து விலகுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராகத் தொடர்வாரா என்பது பற்றித் தெரியில்லை சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, வரும் 8ஆம் தேதி லிபரல் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட இருக்கிறது. அதில் கட்சி தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படும் எனத் தெரிகிறது. அந்தக் கூட்டத்தில், இடைக்கால பிரதமர் யார் என்பது பற்றியும் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதன்பிறகே தனது ராஜினாமா குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்களிடம் ட்ரூடோவின் லிபரல் கட்சி மோசமாக தோல்வியடையும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
2013ஆம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவராக ஜஸ்டின் ட்ரூடோ பொறுப்பேற்றார். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ 2015ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ட்ரூடோவின் கட்சி தேர்தலில் பெரும்பான்மை பெற முடியாமல் வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.