உலகம்

சத்தமில்லாமல் அழியும் உலகத்தின் நுரையீரல்: அமேசானில் அதிகரித்த காடழிப்பு!!

webteam

கொரோனா நேரத்தை பயன்படுத்தி அமேசானில் காடு அழிப்பு அதிவேகமாக நடைபெறுவதாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உலகநாடுகள் போராடி வருகின்றன. சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை கொரோனாவால் பீதியடைந்துள்ளன. உயிரிழப்புகள், பொருளாதார சரிவுகள் என கொரோனா பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கச் சொல்லி வலியுறுத்துகின்றன. இப்படி ஒருபுறம் உலகமே கொரோனாவிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் மறுபுறம் அமேசான் காடுகளை அழித்துவருகின்றனர் மனிதர்கள்.

அமேசான் காடுகளை உலகத்தின் நுரையீரல் என்று அழைப்பார்கள். புவிக்கு தேவையான ஆக்சிஜனில் 20%க்கும் மேல் அமேசான் காடுகளால் கிடைக்கிறது என்ற தகவலும் உண்டு. கிட்டத்தட்ட 9 நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் அமேசான் காடுகளின் பெரும்பகுதி பிரேசிலில் உள்ளன. இப்படி இயற்கையின் கொடையான அமேசானுக்கு எதிராக மனிதர்கள் களம் இறங்கி உள்ளனர். கொரோனா நேரத்தை பயன்படுத்தி காடு அழிப்பு அதிவேகமாக நடைபெறுவதாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால், இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 64% காடழிப்பு அரங்கேறியுள்ளதாக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த வருடம் ஏப்ரலில் 248 சதுர கிமீ அளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டன. இந்த வருடம் ஏப்ரலில் 405 சதுர கிமீ அளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் சட்டவிரோத காடழிப்பு 55% அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 1202 சதுர கிமீ அளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

தங்க வேட்டைக்காக சுரங்கங்கள் தோண்டப்படுவது, மரங்கள் வெட்டப்படுவது என இந்த காடழிப்பு தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கையைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும், பிரேசில் அதிபர் சாயீர் போல்சனாரூ மீது ஆரம்பம் முதலே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

வளர்ச்சிக்காக காடுகள் அழிக்கப்படுவது தவறல்ல என பலமுறை தன் கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்த பிரேசில் அதிபர் மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நம்பிக்கை இழந்தே உள்ளனர். காட்டுத்தீ ஏற்பட்டு அமேசான் எரிவதும், மனிதர்களால் ஏற்படும் காடழிப்பும் ஒரு வனம் அழிவு மட்டுமல்ல இது ஒட்டுமொத்த பூமிக்குமே பாதிப்பை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.