உலகம்

5 வயது சிறுவனின் வயிற்றில் 123 காந்த மணிகள்... பெற்றோரின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபரீதம்!

Sinekadhara

சீனாவில் 5 வயது சிறுவன் டிவியைப் பார்த்துக்கொண்டே 123 காந்த மணிகளை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் 12 வயது சிறுமி மற்றும் 5 வயது சிறுவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுள்ளனர். சிறுவனும், சிறுமியும் டிவி நிகழ்ச்சியில் மூழ்கியிருந்த சமயத்தில், அந்த 5 வயது சிறுவன் தனது விளையாட்டுப் பொம்மைகளுடன் இருந்த காந்த மணிகளை எடுத்து ஒவ்வொன்றாக விழுங்கியுள்ளான்.

மாலை பெற்றோர்கள் வந்தவுடன், தனது விளையாட்டு பொம்மைகளுடன் இருந்த ஒரு பந்தை தான் விழுங்கிவிட்டதாகக் கூறியுள்ளான். உடனே பெற்றோர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் விளையாட்டு பந்து ஓரிரு நாட்களில் தானாக வெளிவந்துவிடும் என மருத்துவர் கூறியுள்ளார்.

ஆனால் 5 நாட்கள் ஆகியும் பந்து வெளியே வராததால் சிறுவனை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்ததில், சிறுவனின் உடலில் ஏராளமான மணிகள் இருந்ததைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 4 மணிநேர அறுவைசிகிச்சைக்குப் பிறகு சிறுவனின் உடலிலிருந்து 123 காந்த மணிகளை அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து அறுவைசிகிச்சை செய்த மருத்துவர் வான்வேய் சென், ‘’இத்தனை காந்த மணிகளை ஒரே நேரத்தில் விழுங்குவது என்பது அசாதாரணமானது. இந்த அறுவைசிகிச்சை செய்வதற்கு அதிகநேரம் ஆகிவிட்டது. மேலும் மணிகளை ஒவ்வொன்றாக அகற்றுவதற்கு அதிகநேரம் எடுத்தது’’ என்று கூறியுள்ளார்.

அறுவைசிகிச்சை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து சிறுவன் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.