இந்திய தயாரிப்பான போபர்ஸ் பீரங்கிகளில் போலி சீன உதிரி பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது.
இது தொடர்பாக டெல்லியை தலைமையகமாக செயல்படும் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது. 1999 கார்கில் போரில் போது இந்திய ராணுவத்தில் தனுஷ் எனப்படும் போபர்ஸ் பீரங்கிகள் முக்கிய பங்கு வகித்தது. இவ்வகையான பீரங்கிகள் புதிய தொழில் நுட்பங்களுடன் இப்போதைய கால கட்டத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்ப முறையில் போபர்ஸ் பீரங்கிகள் ஜாபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பீரங்கிகளில் பொருத்தப்படும் உதிரி பாகங்கள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவை என கூறப்பட்டு, அதில் போலியான சீன தயாரிப்பு உதிரி பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூர் ஆயுத தொழிற்சாலையில் முதல்கட்டமாக தயாரிக்கப்பட்ட பீரங்கிகளில், 'வயர் ரேஸ் ரோலர் தாங்கி' என்ற போலி சீன உதிரி பாகங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது என சிபிஐ விசாரணையில் தெரியவந்து உள்ளது. டெல்லியை சேர்ந்த சித் சேல்ஸ் சிண்டிகேட் என்ற ஆயுத உதிரி பாகங்கள் விநியோகும் நிறுவனத்திடம், உள்நாட்டில் தயாரிக்கப்படும் போபர்ஸ் பீரங்கிகளுக்கு உதிரி பாகங்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.35 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த 2013-ஆம் ஆண்டில் போடப்பட்டது. இதில், ஜெர்மனியில் உள்ள சிஆர்பி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என்று கூறி, போலியாக சீன தயாரிப்பு உதிரி பாகங்களை பீரங்கியில் சேர்த்துள்ளது சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல், மே, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் விநியோகம் செய்யப்பட்ட உதிரி பாகங்கள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது என போலியாக விற்கப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது அவை ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது இல்லை என்பது நிரூபனம் ஆனதாக தெரிவித்துள்ள சிபிஐ, சீனாவின் ஹெனான் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தால் இந்த உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டவை என்பதையும் கண்டறிந்துள்ளது. இதற்காக டெல்லியை சேர்ந்த நிறுவனம் போலியான ஆவணங்களை வழங்கியதும், அதற்கு ஜாபல்பூர் ஆயுத தொழிற்சாலை அதிகாரிகளே உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக டெல்லியை சேர்ந்த நிறுவனம் மற்றும் ஆயுத தொழிற்சாலையின் பெயர் வெளியிடப்படாத அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.