ஷேக் ஹசீனாவுக்கு ஷாக் கொடுக்கத் தயாராகும் வலையில் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஷேக் ஹசீனாவின் பழைய எதிரி எனக் கூறப்படுகிறது. இது, விரைவில் தாயகம் செல்லவிருக்கும் ஷேக் ஹசீனாவுக்கு எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்?
அண்டை நாடான வங்கதேசத்தில், 2024ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது, ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பின்.என்.பி. கூட்டணி அமோக வெற்றிபெற்று அரியணையைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய கூட்டாளியான முகமது ஷஹாபுதீன், கடந்த ஜூலை 24ஆம் தேதி தனது பதவியிலிருந்து விலகினார். கடுமையான உடல்நலக் குறைபாடுகளைக் காரணம் காட்டி அவர் பதவி விலகியதாக அவரது அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடும் அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே அவர் ராஜினாமா செய்ததாகத் தகவல்கள் வெளியாகின.
எனினும், வங்கதேச அரசியலமைப்புச் சட்டப்படி 90 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற விதி உள்ளது. அதன்படி, ஆளும் பிஎன்பி கட்சியின் மூத்த தலைவர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் (78) அதிபர் வேட்பாளருக்கு நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து ஓய்வுபெற்ற ராணுவ கர்னலும், லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் தலைவரும், ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான 11 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளருமான 84 வயதான ஓலி அகமது நிறுத்தப்பட்டார். இதில், 255 - 88 என்ற வாக்கு வித்தியாசத்தில் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் வெற்றிபெற்றார். இதையடுத்து, அடுத்த வங்கதேச அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டாக்கா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றபோது அரசியலில் நுழைந்த ஆலம்கீர், பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியை எதிர்த்து 1969இல் நடந்த மாணவர் எழுச்சியில் முக்கிய தலைவராகச் செயல்பட்டார். பின்னர் 1990களின் தொடக்கத்தில் பிஎன்பி கட்சியில் இணைந்தவர், ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய எதிரணி தலைவர்களாக உருவெடுத்தார். அக்காலகட்டத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் பலமுறை கைது செய்யப்பட்டார். அண்மையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றிய அவர், 2001 முதல் 2006 வரை மறைந்த பிஎன்பி தலைவர் கலீதா ஜியா ஆட்சியில் வேளாண்மை, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல அமைச்சரவைப் பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், இந்தியாவில் உள்ள ஷேக் ஹசீனா, ’தமக்கு என்ன நடந்தாலும் டிசம்பரில் வங்கதேசம் செல்ல உள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார். இதை வரவேற்றுள்ள வங்கதேச அரசு, அவரைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும் ஆயத்தமாகி வருகிறது. அதேநேரத்தில், ஆளும் கட்சியின் மூத்த தலைவரே தற்போது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது அரசுக்கு சாதகமாகவும், அதேநேரத்தில் ஷேக் ஹசீனாவுக்கும் பாதகமாகவும் பார்க்கப்படுகிறது. இதனால், வங்கதேச அரசின் ஆட்டம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.