கருப்பினத்தவர்
கருப்பினத்தவர் X தள வீடியோ
உலகம்

அமெரிக்கா: ஓஹியோவில் போலீஸார் தாக்கியதில் கருப்பினத்தவர் மரணம்

Jayashree A

அமெரிக்காவில் கருப்பின மக்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் போலீசார் சிலர் அங்கிருக்கும் மதுபானக்கடை ஒன்றில் கருப்பினத்தவர் ஒருவரை வலுக்கட்டாயமாக கழுத்தில் மண்டியிட்டு கைதுசெய்ய முற்படுகின்றனர். இதில் கருப்பினத்தவர் இறந்து விடுகிறார். இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் ஒரு கார் விபத்து நடந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் கருப்பினத்தைச் சேர்ந்தவரான யூஜின் டைசன். அவர் போலீசாருக்கு பயந்து அவசரமாக அருகில் இருந்த மதுபானக் கடைக்குள் ஓடுகிறார். அவரை துரத்திச்சென்ற போலீசார் அவரை கைது செய்ய முற்படுகின்றனர். அச்சமயம் டைசனுக்கும் போலீசாருக்கும் இடையில் வாக்குவாதம் நடக்கிறது. இதில் போலீசார் டைசனை தரையில் சாய்த்து, அவரது முன்னங் கழுத்தை தனது கால் முட்டியைக்கொண்டு அழுத்தி அவரினை கைகளில் விலங்கிட முற்படுகின்றனர்.

இதில் மூச்சுவிட திணறிய டைசன், “என்னால் மூச்சு விட முடியவில்லை..” என்று தொடர்ந்து போலீசாரிடம் கத்துகிறார். ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்ளாத போலீசார் அவரை கைது செய்வதில் முனைப்பை காட்டுகின்றனர். ஒரு கட்டத்தில் டைசன் அசையாமல் இருக்கவே, அவரை பரிசோதித்த போலீசார், டைசனின் இதயத்துடிப்பு குறைவதைக்கண்டு, அவரின் கையுறைகளை அகற்றி அவருக்கு CPR கொடுக்கின்றனர். அதன் பிறகு ஸ்ட்ரெச்சரில் ஆம்புலன்ஸிற்கு ஏற்றி செல்கின்றனர். இந்தவீடியோவானது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் டைசன் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவில், காவல்துறையின் மிருகத்தனமான இப்போக்கைகண்டித்து, இனப் பாகுபாடுகளுக்கு எதிரான எதிர்ப்புகளை மக்களிடையே தூண்டியுள்ளது.

போலீசாரால் கொல்லப்பட்ட இந்த டைசன் கடந்த 13 நாட்களுக்கு முன்புதான் 24 வருட சிறை தண்டனையிலிருந்து பரோலில் விடுவிக்கப்பட்டு வெளிவந்தவர் என்று கூறப்படுகிறது.