பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தினர் தாக்குதல் x
உலகம்

பாகிஸ்தானில் தொடர் பயங்கரவாத தாக்குதல்கள்.. யார் இந்த பலூச் விடுதலை ராணுவத்தினர்?

பாகிஸ்தானில் 2 நாட்களுக்குள் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழக்க காரணமாகியிருக்கிறது பலூசிஸ்தான் விடுதலை ராணுவம். பாகிஸ்தானில் தனி நாடு கேட்டு போராடி வரும் இவர்கள் யார்?

PT WEB

பாகிஸ்தானில் நிலப்பரப்பின் அடிப்படையில் மிகப்பெரியதாக இருந்தாலும், குறைவான மக்கள் தொகை கொண்டது பலூசிஸ்தான் மாகாணம். இந்த மாகாணத்தில், 40 மணி நேரத்துக்குள் 12-க்கும் அதிகமான இடங்களில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தினர் ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அப்போது அந்நாட்டு பாதுகாப்பு படைகளுக்கும் இடையே மோதலும் வெடித்துள்ளது. இதில், பொதுமக்கள் 31 பேர், பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தை சேர்ந்த 145 பேரும், பாதுகாப்பு படையினர் 17 பேர் என சுமார் 200 உயிரிழந்துள்ளனர்.

பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள்

சரி, இந்த பலூச் விடுதலை ராணுவம் என்பது யார்?. இவர்கள் சுதந்திர பலூசிஸ்தான் கோரி போராடுபவர்கள். தங்கள் மாகாணத்தில் இயற்கை எரிவாயு, கனிம வளங்களை பாகிஸ்தான் அரசு அநியாயமாக சுரண்டுவதாக கூறி, கிளர்ச்சியை முன்னெடுத்துள்ளவர்கள். குறிப்பாக, சீனாவின் நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களை எதிர்த்து வருகின்றனர். முன்பு வீரியம் குறைந்த இயக்கமாக கருதப்பட்ட பலூச் விடுதலை ராணுவம், கடந்த சில ஆண்டுகளாக ஒருங்கிணைந்த தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ராணுவ மற்றும் கப்பல் படை தளங்களில் புகுந்து, அந்நாட்டு அரசுக்கு அதிர்ச்சி அளித்த இந்த அமைப்பினர், கடந்தாண்டு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தினர். அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள பலூச் விடுதலை ராணுவத்துக்கு, இந்தியா ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், இந்தியா அதனை மறுத்து வருகிறது.