Bali temple pt web
உலகம்

ஐ-போனை திருடும் குரங்குகள்- காரணம் தெரிஞ்சா Shock ஆகிடுவீங்க!

பாலியில் உள்ள கோயிலில் இருக்கும் குரங்குகள் ஆன்ட்ராய்டு போனை விட ஐபோன்களை குறி வைத்து திருடி வருகிறது.

Praveen Joshva L

இந்தோனேசியாவில் உள்ள பாலி மாகாணத்தில் உள்ள உலுவாத்து என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு இந்து சமய கோயில் உலுவாத்து கோயில் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்த கோவில் சிவபெருமானின் மற்றொரு வடிவமாக கருதப்படுகிற அசிந்தியன் என்னும் கடவுளுக்கு கட்டபட்டக் கோயிலாகும்.

ஆன்மிகத்தை தாண்டியும் இது புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவதால் மதங்களை தாண்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் கோயிலாக இது அமைந்துள்ளது. இந்த கோயிலை சுற்றி ஏராளமான குரங்குகள் உள்ள நிலையில், அது பக்தர்களிடம் இருந்து பொருள்களை தொடர்ந்து திருடி வருவதாக வெளியான புகார்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ப்ரீத்தி ஜெயின் என்ற இந்திய சுற்றுலா பயணி பாலி கோயிலில் குரங்குகள் நடத்தும் திருட்டு சம்பவங்கள் குறித்து வெளியிட்ட காணொளி வைரலான நிலையில், இந்தியாவிலும் இது குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது.

50 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஆன்மிக இடமாக இருந்த இந்த கோயில் அதன் பின்னரே பிரபல சுற்றுலா தலமாக மாறியுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த கோயிலுக்கு வருவதையடுத்து, அதுவரை காட்டில் உணவுப்பொருள்களை தேடிய குரங்குகள் ஒரு கட்டத்தில் அந்த வாழ்க்கையை விட்டு சுற்றுலாப் பயணிகள் தரும் உணவை மட்டுமே நம்பியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.

மேலும், இந்த கோயிலில் உள்ள குரங்குகள் சுற்றுலாப் பயணிகளின் உடமையை திருடி வைத்துக்கொண்டு பின்னர் அவர்களிடம் உணவு பொருள்களை வாங்கிய பின்னரே அவர்களின் உடமைகளை திரும்ப கொடுக்கிறது. அதே போல சமீப காலமாக சுற்றுலா பயணிகளின் ஆண்ட்ராய்ட் போனை விட ஐ போன்களை குறிவைத்தே இந்த குரங்குகள் திருடுவதாகவும் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்ட் போனை திருடும்போது கிடைக்கும் உணவு வகைகளை விட, ஐ போன்களை திருடும்போதுதான் அதிக விலை உயர்ந்த உணவு பொருள்கள் கிடைப்பதை குரங்குகள் உணர்ந்ததே இதற்கு முக்கிய காரணம் என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். அதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் பிஸ்கட், வாழைப்பழங்களை கொடுத்தாலே குரங்குகள் திருடிய பொருள்களை திரும்ப கொடுத்துவிடும் என்றும், இப்போதெல்லாம் ஆப்பிள், ரஸ்தாளி போன்ற விலை உயர்ந்த உணவு பொருள்களை கொடுத்தால் மட்டுமே திருடிய பொருளை குரங்குகள் திரும்ப கொடுப்பதாகவும் அங்குள்ள உள்ளூர் வாசிகள் கூறுகிறார்களாம்.