உலகம்

ஓடும் ரயிலின் குறுக்கே விழுந்த பெண் - நல்வாய்ப்பாக உயிர்தப்பிய அதிசயம்

ச. முத்துகிருஷ்ணன்

அர்ஜெண்டினாவில் ரயில் நடைமேடையில் காத்திருந்த பெண் ஒருவர் திடீரென மயக்கமடைந்து ஓடும் ரயிலின் குறுக்கே விழுந்த வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜெண்டினாவில் கோன்சலஸ் கேட்டனில் உள்ள இண்டிபெண்டண்ட் நிலையத்தில் கேண்டெலா என்ற பெண் பயணி ஒருவர் ரயிலுக்கு காத்திருந்தார். தண்டவாளத்தில் ரயில் சென்றுக்கொண்டிருந்தப்போது திடீரென அப்பெண் மயக்கநிலை அடைந்து தடுமாறி நடக்கத் துவங்கினார். உடனிருந்த பயணிகள் சுதாரிப்பதற்குள் யாரும் எதிர்பாராத வகையில் ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே விழுந்தார் அந்தப் பெண். அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே ரயிலை நிறுத்தினர்.

ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் சிக்கி லேசான காயத்துடன் தப்பிய அப்பெண்ணை ரயில்வே காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்குள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தபின் தற்போது வீடு திரும்பியுள்ளார் கேண்டெலா. நிகழ்ந்த சம்பவம் குறித்து பேட்டியளித்த கேண்டெலா, “எனக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்து மயங்கி விழுந்தேன். எனக்கு முன்னால் இருப்பவரை நான் எச்சரிக்க முயற்சித்தேன். ஆனால் நான் ரயிலில் மோதிய தருணம் கூட நினைவில் இல்லை. நடந்த எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அளித்த பேட்டியில், “நாங்கள் ரயிலுக்காகக் காத்திருந்தோம். திடீரென்று அவள் தண்டவாளத்தில் விழுந்தாள். அதிர்ச்சி அடைந்தோம். அவளுக்கு என்ன ஆனது என்று அனைவரும் பயந்தோம் . ஆனால் இந்த பெண் மறுபிறவி எடுத்துள்ளார். அவர் உயிர் தப்பியது அதிசயம் தான்.” என்று தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 29 ஆம்தேதி நடந்த விபத்தின் பதைபதைக்கும் காட்சிகளை அந்நாட்டு போக்குவரத்துத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.