பாகிஸ்தானில் ஆணவக் கொலை என்று சந்தேகிக்கப்படும் மற்றொரு கொடூரத்தில், 21 வயது பெண் ஒருவர் நடனம் மற்றும் மாடலிங் தொழிலை செய்ததற்காக அவரது சகோதரரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான், லாகூரிலிருந்து 130 கிமீ தொலைவில் உள்ள ரெனாலா குர்த் ஒகாராவைச் சேர்ந்தவர் சிட்ரா. இவர் உள்ளூர் ஆடை பிராண்டிற்காக மாடலிங் மற்றும் பைசலாபாத் நகரின் திரையரங்குகளில் நடனமாடும் தொழிலை செய்துவந்தார்.
சிட்ராவின் இந்த தொழில் அவரின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. எனவே அவர்கள் "குடும்ப பாரம்பரியத்திற்கு எதிரான" இந்த தொழிலை விட்டு வெளியேறவேண்டும் என்று கூறி அவரிடம் தொடர்ந்து வற்புறுத்தினார்கள், ஆனால் சிட்ரா தொடர்ந்து நடனமாடி வந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் சிட்ரா தனது குடும்பத்துடன் ரமலான் பண்டிகையை கொண்டாடுவதற்காக பைசலாபாத்தில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது பெற்றோரும் சகோதரர் ஹம்சாவும் நடனமாடும் தொழில் குறித்து தகராறு செய்துள்ளனர், பின்னர் சண்டை முற்றி, சிட்ரா மீது ஹம்சா துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து, குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹம்சாவை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரி ஃப்ராஸ் ஹமீத், சிட்ராவின் நடன நிகழ்ச்சியை உறவினர் ஒருவர் மொபைல் போனில் ஹம்சாவுக்கு அனுப்பினார் எனவும், அதனைப் பார்த்த ஆத்திரத்தில் தனது சகோதரியை சுட்டுக் கொன்றதாக ஹம்சா வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.