Nepal Rescue person experience Reuters
உலகம்

”ஒரே ஒரு வெளிச்சம்.. அது இல்லை என்றால் அவ்வளவுதான்..” நேபாளத்தில் உயிர் பிழைத்தவர் உருக்கம்!

நேபாள பெருவெள்ளத்தில் உயிர் பிழைத்த ஒருவர், தான் தப்பித்த நிகழ்வு குறித்து விவரித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

நேபாளத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி பனிப்பாறை உடைவு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நேபாளத்தில் 1,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நேபாள வெள்ளத்தின்போது திரிசூலி ஆற்றில் அமைந்திருந்த 'மேல் திரிசூலி 1' (Upper Trishuli 1) நீர்மின் நிலையம் முழுவதுமாக அடித்துச்செல்லப்பட்டது. அந்தச் சூழலில் நீர்மின் நிலையச் சுரங்கப் பாதையில் புகுந்த வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 600க்கும் அதிகமானோர் சுரங்கப் பாதையில் சிக்கிக்கொண்டனர்.

இதில் பலர், பின்னர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதில் இருந்து தப்பிப் பிழைத்த, தன் பகதூர் தமாங் (Dhan Bahadur Tamang) என்ற தொழிலாளியின் அனுபவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய தன் பகதூர் தமாங், சுரங்கப் பாதைக்குள் பணியாற்றி நிலத்தடியில் இருந்தபோது, திடீரெனக் காற்று அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு தூசிகள் பறந்தன என்றும், அடுத்த சில நிமிடங்களில் திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட பிரம்மாண்ட வெள்ள அலை சுரங்கப் பாதைக்குள் அதிவேகமாகப் பாய்ந்து வந்தது என்றும் கூறியுள்ளார்.

Dhan Bahadur Tamang

வெள்ளத்தைக் கண்டதும் அங்கிருந்த ஒரு டேங்கர் லாரியின் மேல் ஏறித் தப்ப முயன்றதாகவும், தனது காலில் கடுமையான காயம் ஏற்பட்ட நிலையிலும் அருகிலிருந்த குழாய்களைப்பிடித்துக் கொண்டு தண்ணீரில் மூழ்காமல் இருக்கப் போராடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வெள்ளத்தின் வேகம் சற்றுக் குறைந்ததும் ஒரே ஒரு டார்ச் லைட் வெளிச்சத்தில், இருளுக்கு நடுவே சேறு மற்றும் உயிரிழந்த சக தொழிலாளர்களின் சடலங்களைக் கடந்து வெளியே இருந்து வந்த ஒரு வெளிச்சத்தை கண்டு உயிர் பிழைத்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்தப் பேச்சு பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் வலியைச் சொல்வதுபோல அமைந்துள்ளது.