கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட அவரை வெள்ளை மாளிகையிலிருந்து வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் முன்பே ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது.
74 வயதான அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சையின்போது இரண்டு முறை ஆக்ஸிஜன் அளவு குறைந்து, உடல்நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டதால் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டு, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர். அவருக்கு உணவு கொடுக்கப்பட்டு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய ஒருநாள் தேவைப்படுவதாகவும், பெரும்பாலும் திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலையில் தனது ஆதரவாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், கொரோனா பற்றி தான் நன்கு தெரிந்துகொண்டதாகவும், இந்த அனுபவம் பள்ளிக்குச் செல்வதைப்போல் இருந்ததாகவும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.
அந்த வீடியோ பதிவிட்ட சிலமணிநேரத்தில், மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அவர், வீதிகளில் காத்திருந்த அவருடைய ஆதரவாளர்களுக்கு கையசைத்தபடி சென்றுள்ளார்.
கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள இந்த நேரத்தில், மருத்துவமனையில் இருக்கவேண்டிய அதிபர் வெளியே வந்திருப்பது குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.