அமெரிக்கா தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக அண்மையில் பொறுப்பேற்றிருந்தார் 78 வயதான ஜோ பைடன். இந்நிலையில் அமெரிக்கா அதன் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அண்மையில் நட்பு நாடுகளுடன் நடந்த மாநாட்டு கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார் அவர். ஆண்டு தோறும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பாக நடைபெறும் முனிச் பாதுகாப்பு செக்யூரிட்டி மாநாட்டில் இதை தெரிவித்துள்ளார் பைடன். இந்த மாநாடு ஆன்லைன் மூலமாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“கடந்த காலங்களில் ஆட்சியாளர்களால் அமெரிக்காவுக்கும், நட்பு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட கசப்புகள் களையப்படும். அதன் மூலம் உலகத்துடன் இணக்கமாக பயணிக்க விரும்புகிறோம். அமெரிக்கா ஜனநாயகத்தை அடிப்படையாக வைத்து சுதந்திரத்தை பாதுகாப்பது, சட்டடங்களை மதிப்பது, வாய்ப்புகளை உருவாக்குவது, உரிமைகளை வென்றெடுப்பது மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்தும்.
இந்த மதிப்புகள் எல்லாம் கடந்த ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டிருந்தாலும் அதற்கு மதிப்பளிக்கும் வகையில் நாங்கள் செயல்படுவோம். ஜனநாயகத்தை அடிப்படையிலிருந்து கட்டமைக்கும் நோக்கில் கடந்த சில நாட்களாகவே கனடா, மெக்சிக்கோ, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் பேசியுள்ளேன். இதன் மூலம் அமெரிக்கா அதன் இயல்பு பாதைக்கு திரும்பும்” என பைடன் தெரிவித்துள்ளார்.