லிடியா தோர்ப்
லிடியா தோர்ப் twitter pages
உலகம்

”சக எம்.பியால் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன்” - நாடாளுமன்றத்தில் கண் கலங்கிய ஆஸி. பெண் எம்.பி.!

Prakash J

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் பெண் எம்.பியான பெண் லிடியா தோர்ப் உரையாற்றினார். அப்போது தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர், ”இந்த நாடாளுமன்றக் கட்டடம் பெண்கள் பாதுகாப்பாக பணி செய்வதற்கான கட்டடம் அல்ல. என்னை விடாமல் பின்தொடர்வது, உடலை அத்துமீறி தொடுவது போன்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானேன். வாய்மொழியாகவும் தாக்குதலுக்கு உள்ளானேன்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எனது அலுவலகத்தைவிட்டு வெளியே நடக்க பயந்தேன். அலுவலக கதவுகளை திறக்கவே அஞ்சினேன். வெளியே செல்வதற்கு முன் மெதுவாக திறந்து எவருமில்லையென உறுதி செய்து கொள்வேன். கட்டடத்தின் உள்ளே வரும் முன் பாதுகாப்பிற்காக என்னுடன் எவரையேனும் வைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். என்னைப் போன்று மேலும் பலர் இருந்தாலும், தங்களுடைய நலனுக்காக அவர்கள் எதுவும் சொல்ல முன்வரவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை மற்றொரு நாடாளுமன்ற எம்பியான டேவிட் வான் மீது வைத்திருந்தார். ஆனால், இதில் உண்மையில்லை என மறுத்த வான், இதனால் தாம் மனதளவில் நொறுங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கட்சியும் டேவிட் வான்-ஐ இடைநீக்கம் செய்துவிட்டது.

ஆஸ்திரேலியாவில், நாடாளுமன்றத்திற்குள் பாலியல் அத்துமீறல்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் 2021லிருந்து வரத் தொடங்கியுள்ளன. அரசியல் உதவியாளர் பிரிட்டனி ஹிக்கின்ஸ் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அதிகாரி ஒருவர் பாராளுமன்ற அலுவலகத்திற்குள்ளேயே தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கென தனித்தனியே 5 விசாரணைகள் நடைபெற்றன. ஹிக்கின்ஸ் வழக்கு நாடு தழுவிய எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது.

இது சம்பந்தமாக நடைபெற்ற ஒரு விசாரணை, முறையற்ற வகையில் நடந்ததாக கூறப்பட்டாலும், ஹிக்கின்ஸின் மனநலத்திற்கு பாதிப்பு வரக்கூடும் என்பதால் மறுவிசாரணை செய்யப்படவில்லை. அரசாங்கம் நடத்திய 2021 விசாரணை ஒன்றும் ஆஸ்திரேலியா அரசியலில் உள்ள பெண்களுக்கெதிரான நிலையை கடுமையாக விமர்சித்தது. அப்போது, நாடாளுமன்றத்தில் பணியாற்றும் 3இல் 1 பங்கினர் பாலியல் துன்புறுத்தல்களுக்கும், தாக்குதல்களுக்கும் ஒரு முறையாவது ஆளானதாக தெரிவித்தனர். இவற்றில் அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 63% பெண் உறுப்பினர்கள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.