ஓபன் ஏஐ தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், எதிர்காலத்தில் ஏஐ சேவைகள் மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற பொதுப்பயன்பாட்டுச் சேவைகளாக 'மீட்டர்' அடிப்படையில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால், பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் அளவுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
செய்தியாளர் - இனியா
மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற பொதுப்பயன்பாட்டுச் சேவைகளைப் போலவே, எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ஏஐ சேவையும் 'மீட்டர்' அடிப்படையில் வழங்கப்படும் என்று ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற பிளாக்ராக் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டில் (BlackRock U.S. Infrastructure Summit) பேசிய சாம் ஆல்ட்மேன், ஏஐ தொழில்நுட்பமானது இனி வரும் காலங்களில் ஒரு சிக்கலான மென்பொருளாக இல்லாமல், மின்சாரத்தைப் போன்ற ஓர் அத்தியாவசியச் சேவையாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பெரும்பாலான ஏஐ சேவைகள் Subscription முறையில் உள்ளன. ஆனால், இனி வரும் காலங்களில் மின்சார மீட்டரைப் போலவே, பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் கணக்கீட்டுத் திறனுக்கு ஏற்ப மட்டும் கட்டணம் செலுத்தும் 'மீட்டர்' முறை அமலுக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார். இது சாமானிய மக்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை, தங்களுக்குத் தேவையான அளவுக்கு மட்டும் ஏஐ சேவையைப் பெற வழிவகுக்கும்.
மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே கிளவுட் (Cloud) சேவைகளில் இத்தகைய 'பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம்' முறையைப் பின்பற்றி வருகின்றன. இப்போது சாட்ஜிபிடி போன்ற நுகர்வோர் செயலிகளிலும் இந்த மாற்றம் வரப்போகிறது.
மென்பொருள் உருவாக்கம், அறிவியல் ஆராய்ச்சி, Data Analysis மற்றும் வணிகத் திட்டமிடல் எனப் பல துறைகளில் AI ஏற்கனவே பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. மனிதர்கள் பல நாட்கள் செய்யும் வேலையை, AI தொழில்நுட்பம் சில நிமிடங்களில் செய்து முடிக்கிறது. இதனால், பணியாளர்கள் தொழில்நுட்ப வேலைகளைத் தாண்டி, AI அமைப்புகளை வழிநடத்துபவர்களாக மாறத் தொடங்கியுள்ளனர்.
இந்த வளர்ச்சியைத் தக்கவைக்க என்விடியா (Nvidia), அமேசான் (Amazon) மற்றும் சாப்ட்பேங்க் (SoftBank) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, பிரம்மாண்டமான தரவு மையங்களை (Data Centres) ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனம் அமைத்து வருகிறது. ஆயிரக்கணக்கான பணியாளர்கள் மற்றும் அதிநவீன வன்பொருட்களைக் கொண்ட இந்த உள்கட்டமைப்புதான், ஏஐ-யை அனைவருக்கும் மலிவாகக் கொண்டு சேர்க்க உதவும்.
எதிர்காலத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பத்தைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அதேபோல, ஏஐ தொழில்நுட்பமும் நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறி, எந்தத் தடையுமின்றித் தேவைப்படும் போது நாம் பயன்படுத்தும் ஒரு கருவியாக மாறும் என்பதே சாம் ஆல்ட்மேன் முன்வைக்கும் எதிர்காலப் பார்வை.