சுனாமி எச்சரிக்கை
சுனாமி எச்சரிக்கை  புதிய தலைமுறை
உலகம்

அதிர்ந்த பூமி.. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ஊருக்குள் புகும் கடல்நீர் - சுனாமி எச்சரிக்கை

ஜெனிட்டா ரோஸ்லின்

உலகம் எங்கும் புத்தாண்டின் முதல் நாளாம் இன்று மகிழ்ச்சியோடு மக்கள் கொண்டாடி வருகின்ற சூழலில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு அந்நாட்டு மக்களை பெரும் அச்சத்திலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.6 ரிக்டர் வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டு வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், “ இஷிகாவா மாகாணத்தில் உள்ள நோட்டோவை 5 மீ உயரம் வரை சுனாமி தாக்கும். வாஜிமா நகரின் கடற்கரையை 1 மீட்டருக்கும் அதிகமான அலைகள் தாக்கும் .ஹோன்ஷீ அருகே 13 கி.மீ ஆழத்தில் உருவான நிலநடுக்கத்தால் 15 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்” என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது ஜப்பானில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் ரிக்டர் அளவுகோலில் 6 க்கு மேல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வடகொரியா தென் கொரியா மற்றும் ரஷ்யாவின் சைபீரியாவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் கட்டடங்கள் அதிர்ந்ததால் வீடுகளில் இருந்து வீதிகளில் ஜப்பான் மக்கள் தஞ்சமடைந்த இருக்கின்றனர். சாலைகள் விரிசல் விட்டு பிளந்து காணப்படுகிறது. ரயில் நிலையங்கள், வீடுகள், கடைகள் குலுங்கி சேதம் அடைந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.