ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவருக்கு, ஆற்று மணலில் தங்கக் கட்டி கிடைத்த விஷயம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தவிர, அவருடைய வாழ்வையும் மாற்றியமைத்துள்ளது. இது, எங்கு நடந்தது? யாருக்கு கிடைத்தது? இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
மேற்கு கென்யாவின் செபோரோர் (Cheporor) கிராமத்தைச் சேர்ந்தவர் மனஸே லொமாச்சர் (Manasse Lomachar). 33 வயதான இவர், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், மனஸே லொமாச்சர் ஒருநாள் தனது காணாமல் போன ஆட்டைத் தேடி அருகிலிருந்த ஆற்றுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்குச் சிலர் ஆற்று மணலைச் சலிப்பதைப் பார்த்திருக்கிறார். அதுகுறித்து விவரம் கேட்டார். அவர்கள், ’தங்கத்தைத் தேடுவதற்காக இப்படி மணலைச் சலித்துக் கொண்டிருக்கிறோம்’ எனக் கூறியிருக்கின்றனர். இதையடுத்து, அவரும் அவர்களுடன் இணைந்து தங்கத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் அவருக்கு, 3 கிராம் எடையுள்ள ஒரு தங்கக் கட்டி கிடைத்துள்ளது. அந்தத் தங்கக் கட்டியை விற்று இந்திய மதிப்பில் ரூ.26,798ஐப் பெற்றுள்ளார்.இந்தச் சிறு தங்கம், மனஸேவின் வாழ்வையே மாற்றியுள்ளது. அவ்வளவுதான், இந்தச் செய்தி காட்டுத் தீ போல பரவ, கென்யா மற்றும் பக்கத்து நாடான உகாண்டாவில் இருந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் அந்த சிறிய கிராமத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். தவிர, 100-க்கும் மேற்பட்ட சிறு தங்க வியாபாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். இதனால், அங்கு தண்ணீர், குளிர்பானம், உணவகம் எனப் புதிய தொழில்களும் முளைத்து வியாபாரம் சூடுபிடித்து வருகிறது. அதேநேரத்தில், இங்கு பெருமளவு தங்கப் படிமங்கள் இருக்கிறதா என்பது குறித்த எந்த தகவல்களும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், ஒரு குண்டுமணி அளவு தங்கம் கிடைத்தால்கூட அது, தன் வாழ்வை மாற்றும் என்ற நம்பிக்கையில், அக்கிராமத்தில் வறுமையில் வாழும் மக்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். இதனால், அந்தக் கிராமமே மேடுபள்ளமாகவும், குண்டும்குழியுமாகவும் சிதைக்கப்பட்டிருக்கிறது.