ஆப்கானிஸ்தான்  ட்விட்டர்
உலகம்

’இனி மனைவிகளை அடிக்கலாம்..’ சட்டம் இயற்றிய அரசு.. நடுங்கும் ஆப்கான் பெண்கள்!

ஆப்கானிஸ்தானில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பயங்கரமான சட்டம் ஒன்றுக்கு அங்கீகாரம் அளித்து இஸ்லாமிய அமைப்பின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸாடா கையெழுத்திட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

ஆப்கானிஸ்தானில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பயங்கரமான சட்டம் ஒன்றுக்கு அங்கீகாரம் அளித்து இஸ்லாமிய அமைப்பின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸாடா கையெழுத்திட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பயங்கரமான சட்டம் ஒன்றுக்கு அங்கீகாரம் அளித்து இஸ்லாமிய அமைப்பின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸாடா கையெழுத்திட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய 90 பக்க தண்டனைச் சட்டம் அந்நாட்டுப் பெண்களின் அடிப்படைச் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கியிருப்பதுதான் கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆண்களுக்கு அதிகப்படியான அதிகாரத்தைக் கொடுத்து பெண்களை அடிமைபோல் நடத்தும் இந்தப் புதிய தண்டனைச் சட்டத்தை, அந்நாட்டு இஸ்லாமிய அமைப்பின் உச்சதலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸாடா அங்கீகரித்து கையெழுத்திட்டுள்ளதுதான் அண்டை நாடுகளில் பேசுபொருளாகி வருகிறது.

ஆப்கானிஸ்தான்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடப்பதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதிலும் பெண்கள் உயர் கல்வி கற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கணவன்மார்கள் மனைவியை வீட்டில் அடிப்பதை அதாவது குடும்ப வன்முறையை சட்டப்பூர்வமாக்கியுள்ளது தாலிபான் அரசு. குடும்ப சண்டையின் பொது மனைவி மற்றும் குழந்தைகளை ஆண்கள் உடல் ரீதியாக அடிக்கலாம் என்றும், ஆனால் எலும்புகள் உடையும் அளவிற்கோ, திறந்தவெளி காயங்கள் ஏற்படும் அளவிற்கோ தாக்கக் கூடாது என்றும் புதிய சட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மனைவியை அடித்ததில் அவருக்கு கண்ணுக்கு தெரியும்படியான காயங்கள் ஏற்பட்டிருந்தால் கணவன்களுக்கு 15 நாட்கள் மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அதேநேரத்தில் தனக்கு எதிராக துன்புறுத்தல் நடைபெற்றது என்பதை பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்றும் அந்தப் புதிய சட்டம் சொல்கிறது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் உடலில் காயம் ஏற்பட்ட இடத்தை நீதிபதியிடம் காட்டும்போது, காயம் ஏற்பட்ட பகுதியை தவிர, உடலில் மீதமுள்ள பகுதிகளை ஆடையால் மறைத்துவிட வேண்டும் எனவும், அந்த நேரத்தில் தனது கணவர் அல்லது ஆண் துணை ஒருவர் நீதிமன்றத்தில் உடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல, கணவரின் அனுமதி இல்லாமல் உறவினர் வீட்டிற்கு மனைவி சென்றால் அந்த பெண்ணிற்கு மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான் சமூகம், மத அறிஞர்கள், உயரடுக்கு (அஷ்ரஃப்), நடுத்தர வர்க்கம்மற்றும் கீழ் வர்க்கம் (lower class) என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான்

குற்றத்திற்கான தண்டனை, குற்றத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்தல்லாமல், குற்றம்சாட்டப்பட்டவரின் சமூக அந்தஸ்தைப் பொறுத்தே இது தீர்மானிக்கப்படும் என்று அந்த சட்டத்தின் 9 ஆம் பிரிவின்படி கூறப்பட்டுள்ளது. இந்த புதிய 90 பக்க தண்டனைச் சட்டம், முந்தைய அமெரிக்க ஆதரவு ஆட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு (EVAW) சட்டத்தை ரத்து செய்துள்ளது. புதிய சட்டம் தொடர்பாக விவாதிப்பதுகூட குற்றம் என்று என்று கூறப்பட்டுள்ளதால், புதிய சட்டம் பற்றி விவாதிக்கவே மனித உரிமை குழுவை சேர்ந்தவர்களும் அஞ்சுகிறார்களாம். ஆப்கானிஸ்தானின் மனித உரிமைகள் அமைப்பான ரவாதரி, "குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அது நடைமுறைக்கு வராமல் தடுக்க அனைத்து சட்ட வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும்" என்று ஐக்கிய நாடுகள் சபையையும் பிற சர்வதேச அமைப்புகளையும் அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளது.