ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான் பயங்கரவாத அமைப்பினரிடம் அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், கஜினி நகரத்தில் உளவுபடையினரை குறிவைத்து வெடிகுண்டு நிரப்பட்ட கார் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில், 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், “8 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்து நடந்த இடத்திற்கு அருகில் சுமார் 60 பள்ளி குழந்தைகள் படிக்கக்கூடிய பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.” எனத் தெரிவித்தார்.