உலகம்

இலங்கை: எமனாக மாறிய சேமிப்பு பெட்ரோல் - தீயில் கருகி இளம் தம்பதியர் சாவு

webteam

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் தமது தேவைக்காக கட்டிலின் கீழ் சேமித்து வைத்த பெட்ரோல் தீப்பற்றி கொண்டதில் கணவன், மனைவி தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து வல்வெட்டித்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வீடு தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த இருவர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தீயில் கருகி சடலமாக கிடந்ததாக போலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (30) மற்றும் கிருசாந்தினி (26) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் தமது தேவைக்காக பெட்ரோலை வாங்கி வீட்டின் கட்டிலின் கீழ் சேமித்து வைத்திருந்த பெட்ரோல் தீப்பற்றிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப்  போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வீட்டில் எண்ணெய் விளக்கு பயன்படுத்தி வந்து அதன் மூலம் தீப்பற்றி பெட்ரோல் எரிந்து தம்பதிகள் உயிரிழந்தாரா என பல்வேறு கோணங்களில் வல்வெட்டித்துறை போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: ராஜஸ்தான் கூட்டத்தில் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி - பின்னணி என்ன?