பசிபிக் பெருங்கடலில் எல் நினோ 2°C-ஐ மீறி சூப்பர் எல் நினோவாக வலுப்பெற்று, ஐரோப்பாவில் 48°C வரை வெப்ப அலை, தார் உருகும் நிலை, பிரான்ஸ்-ஸ்பெயினில் காட்டுத்தீ, ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிவு போன்ற பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. நவம்பரில் 3.5°C-ஐ தாண்டும் தீவிரம் எதிர்பார்க்கப்படுவதால், உலகளாவிய காலநிலை மேலும் தலைகீழாகும் அபாயம் அதிகரித்துள்ளது.
பசிபிக் கடலின் மேற்பரப்பில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும் நிகழ்வே எல் நினோ என அழைக்கப்படுகிறது. அதுவே வெப்பம் மிகவும் சக்திவாய்ந்த வகையில் 2°C (3.6°F) அல்லது அதற்கும் அதிகமானால் சூப்பர் எல் நினோ என கூறப்படுகிறது. உலகின் இரண்டில் ஒரு பங்கு பகுதியை ஆக்கிரமித்துள்ள பசிபிக் கடலில் ஏற்படும் இந்த வெப்ப நிலை மாற்றம் உலகம் முழுவதும் காலநிலைகளில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் குளிர்பிரதேசங்களாக அறியப்படும் ஐரோப்பாவில் இந்த எல் நினோ காரணமாக இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்பம் பதிவானது. அதிலும் சில பகுதிகளில் 48 டிகிரி செல்ஸியஸ் அளவு வெப்ப அலை பதிவானதால் சாலைகளில் உள்ள தார் உருகும் நிலையும் உருவானது.
அதுமட்டுமில்லாமல் இந்த வெப்ப அலை பாதிப்பு காரணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் காட்டுத்தீ ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான அடர்ந்த காடுகள் தீயில் முற்றிலும் சாம்பலாகியுள்ளன.
இந்தசூழலில் தான் எல் நினோவானது தற்போது சூப்பர் எல் நினோவாக உருமாறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த மாற்றம் இதுவரை இருந்ததை விட காலநிலைகளில் அதிகப்படியான மாற்றத்தை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.
மனிதர்களின் நடவடிக்கைகளால் ஏற்கனவே பூமியின் வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றங்கள் உலகளாவிய வானிலையை தலைகீழாக மாற்றும் என விஞ்ஞானிகள் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தனர். இந்த அதீத வெப்ப மாற்றம் காரணமாக இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடும்வறட்சி மற்றும் காட்டுத்தீ ஏற்படக்கூடும் எனவும், அதேநேரத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளில் பெருமழை மற்றும் வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஐநா எச்சரித்துள்ளது.
தற்போது எல்லோருடைய அச்சத்தையும் உறுதிசெய்யும் வகையில், சூப்பர் எல் நினோ உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசியிருக்கும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர், பசிபிக் பெருங்கடலில் நிலவும் எல் நினோ நிகழ்வு சூப்பர் எல் நினோவாக வலுப்பெற்றது. ஆகஸ்ட் மாதத்தில் சூப்பர் எல் நினோ உருவாவது இதுவே முதல் முறை. சூப்பர் எல் நினோ நவம்பர் மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 3.5° செல்சியஸ் மேல் தீவிரமடையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.
ஒருவேளை இது இறுதியானால் 2027ஆம் ஆண்டு உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டாக மாறும். இதனால் உலகளவில் உணவு பொருட்களின் விலை உயர்ந்து கடும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.