விவேக் ராமசாமி
விவேக் ராமசாமி ட்விட்டர்
உலகம்

”நான் அமெரிக்க அதிபரானால்..”- எலான் மஸ்க் வழியில் அதிரடி காட்டும் இந்திய வம்சாவளி ’விவேக் ராமசாமி’!

Prakash J

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்காக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன், ராபர்ட் கென்னடி, மரியன்னா வில்லியம்சன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

Trump

குடியரசு கட்சி சார்பில் விவேக் ராமசாமி போட்டி

குடியரசு கட்சி சார்பில் பர்கம், கிறிஸ்டி, விவேக் ராமசாமி, டிசாண்டிஸ், நிக்கி ஹாலே, கடந்தமுறை அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் உட்பட 13 பேர் அதிபர் வேட்பாளர்களாகப் போட்டியிட உள்ளனர். இதில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ஏராளமான புகார்கள் இருக்கின்றன. அதேநேரத்தில், ‘ட்ரம்ப் வேட்பாளராக களமிறங்கினால் ஆதரவு கொடுக்க தயார்’ என குடியரசு கட்சியின் பிரதமர் வேட்பாளர் லிஸ்ட்டில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியே அறிவித்துள்ளார். இந்த பேச்சு அமெரிக்கா முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியது.

அதிரடி அறிவிப்புகளை வெளியிடும் விவேக் ராமசாமி!

இந்த நிலையில், “நான், அமெரிக்க அதிபரானால் 75% அரசுப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர். அத்துடன் எஃப்.பி.ஐ, உள்ளிட்ட அமைப்புகளும் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் கலைக்கப்படும்“ எனப் பேசியிருப்பது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் வலைத்தளத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் எடுத்த நடவடிக்கைகளை வைத்தே விவேக் ராமசாமியும் இப்படி பேசியிருப்பதாகக் காரணம் கூறப்படுகிறது.

Elon Musk

எலான் மஸ்க்கின் அதிரடி நடவடிக்கைகள்!

ஆம், எக்ஸ் தளத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, முதலில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களை நீக்கிய எலான் மஸ்க், அதன் பிறகு 4இல் 3 பங்கு ஊழியர்களை நீக்கினார். அதைக் குறிப்பிட்டே இப்போது விவேக் ராமசாமியும் பேசியுள்ளார் எனக் கூறப்படுகிறது. (கடந்த வருடம் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை 75 சதவீதம் அதிரடியாக குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

எலான் மஸ்க்குடன் சார்ந்துபோகும் விவேக் ராமசாமி

இதுகுறித்து விவேக் ராமசாமி, ”எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ததை நான் அரசுக்குச் செய்ய விரும்புகிறேன். அவர் அங்கு செய்த விஷயம் பலருக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. தேவையில்லாத 75 சதவீத ஊழியர்களை அவர் நீக்கியுள்ளார். அது ட்விட்டரில் நமது அனுபவத்தை மேம்படுத்தி இருக்கிறது. அவர் ட்விட்டரில் சிறிய அளவில் இதைச் செய்தார். இதையே நான் பெரியளவில் அரசு நிர்வாகத்தில் செய்ய உள்ளேன். இதன்மூலம் எனக்கும் எலான் மஸ்கிற்கும் தொடர்பு இருக்கிறது என்றகூடச் சொல்லலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.

Elon musk vivek ramaswamy

மேலும் அவர், “நான் வெற்றிபெற்று அதிபரானால், புதியதாகவும், புதுமையாகவும் சிந்திப்பவர்களை என் அரசாங்கத்தில் நிர்வாக ஆலோசனைகளுக்காக நியமித்துக்கொள்வேன். இதில் எலான் மஸ்க்கையும் சேர்த்தக்கொள்ள விரும்புகிறேன். அவர் தனது எக்ஸ் நிறுவனத்தை எவ்வாறு நடத்துகிறாரோ, அதேபோல், நான் அமெரிக்க நிர்வாகத்தை மறுசீரமைத்து அமெரிக்காவை முன்னோககிக்கொண்டு செல்ல விரும்புகிறேன். எங்கள் இருவரின் சிந்தனையும் பல விஷயங்களில் சார்ந்துபோகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த விவேக் ராமசாமி?

இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்கள், பணி நிமித்தமாக அமெரிக்கா ஓஹியோ (Ohio) மாகாணத்துக்குக் குடிபெயர்ந்தனர். இதனால், விவேக் ராமசாமி பிறந்து வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவின் ஓஹியோ மாகணத்திலுள்ள சின்சினாட்டி (Cincinnati) பகுதியில்தான். பள்ளிப்படிப்பை அப்பகுதியிலேயே முடித்த விவேக், இளங்கலை பயோலஜி பட்டப்படிப்பை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

விவெக் ராமசாமி

படிப்புக்குப் பிறகு, கேம்பஸ் வென்ச்சர் நெட்வொர்க் (Campus Venture Network) நிறுவனத்தைத் தொடங்கினார். இதற்கிடையே சட்டப்படிப்பையும் முடித்து வழக்கறிஞராகவும் பணிபுரிந்தார். தொடர்ந்து மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி தொழிலில் கொடிகட்டி பறக்கத் தொடங்கினார். தற்போது அமெரிக்க மருத்துவத் துறைகளில் முன்னணித் தொழிலதிபராக வலம்வரும் விவேக் ராமசாமி, Woke, Nation of victims உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். தனது கல்லூரிக் காலங்களில் படிப்பில் மட்டுமல்லாமல் மியூசிக், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஆர்வம் மிக்கவராக வலம் வந்தவர் விவேக் ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.