உலகம்

4000 சொகுசு கார்களை சுமந்து சென்ற கப்பல் நடுக்கடலில் தீ பிடிப்பு

4000 சொகுசு கார்களை சுமந்து சென்ற கப்பல் நடுக்கடலில் தீ பிடிப்பு

EllusamyKarthik

Porsche, பென்ட்லி, Audi, Lamborghini மற்றும் வோக்ஸ்வேகன் என சுமார் 4000 சொகுசு கார்களை சுமந்து சென்ற சரக்கு கப்பல் ஒன்று அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள போர்ச்சுகல் நாட்டின் அசோர்ஸ் தீவுகள் பகுதியை கடந்து சென்று போய்க்கொண்டிருந்தபோது நடுக்கடலில் தீ பற்றியுள்ளது. இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து கப்பலில் சென்ற கப்பல் குழு உறுப்பினர்கள் 22 பேரை போர்ச்சுகல் கடற்படையினர் மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். 

இருந்தும் அந்தக் கப்பலில் தீ அணையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு படகுகள் நேற்றுதான் கப்பலை நெருங்கியுள்ளது. அப்போதிலிருந்தே தீயணைப்பு வீரர்கள் தங்கள் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பணி எப்போது முடியும் என்பது இப்போதைக்கு சொல்ல முடியாது என கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

 

தங்கள் நிறுவன கார்கள் தீயில் எரிந்து வருவதை Lamborghini மற்றும் வோக்ஸ்வேகன் கார் தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இந்த கப்பலில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அதற்கான பேட்டரிகள் இருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2019-இல் இதேபோல சொகுசு கார்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்று ‘Bay of Biscay’ கடலில் தீப்பற்றி எரிந்து, கடலுக்குள் மூழ்கியது. அப்போது அதில் கொண்டு செல்லப்பட்ட கார்களும் கடலுக்குள் மூழ்கியிருந்தன. அந்த விபத்தில் Audi மற்றும் Porsche நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தது.