EL Nino Effect Spain WildFire
உலகம்

வெளியேற்றப்பட்ட 2.20 லட்சம் மக்கள் : கோரமுகத்தை காட்டிய எல் நினோ.. ஐரோப்பாவை அசைக்கும் பேரழிவு!

எல் நினோ காரணமாக ஐரோப்பாவில் 1.40 லட்சம் மக்கள் வெளியேற்றப்படும் அளவு மாபெரும் பேரழிவு நடைபெற்று வருகிறது.

Praveen Joshva L

பசிபிக் கடலில் எல் நினோ காரணமாக வெப்பம் அதிகரித்து, குளிர் பிரதேசமான ஐரோப்பாவிலும் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அலை பதிவாகியுள்ளது. இதனால் பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் காட்டுத்தீ பரவி ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் சாம்பலாகின. தீ குடியிருப்புகளை நோக்கி வேகமாக பரவ, ராணுவ உதவியுடன் 2.20 லட்சம் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பசிபிக் கடலின் மேற்பரப்பில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும் நிகழ்வே எல் நினோ என அழைக்கப்படுகிறது. உலகின் இரண்டில் ஒரு பங்கு பகுதியை ஆக்கிரமித்துள்ள பசிபிக் கடலில் ஏற்படும் இந்த வெப்ப நிலை மாற்றம் உலகம் முழுவதும் காலநிலைகளில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் குளிர்பிரதேசங்களாக அறியப்படும் ஐரோப்பாவில் இந்த எல் நினோ காரணமாக இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்பம் பதிவானது. அதிலும் சில பகுதிகளில் 48 டிகிரி செல்ஸியஸ் அளவு வெப்ப அலை பதிவானதால் சாலைகளில் உள்ள தார் உருகும் நிலையும் உருவானது.

இந்த நிலையில், இந்த வெப்ப அலை பாதிப்பு காரணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் காட்டுத்தீ ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகே பற்றி எரியும் காட்டுத்தீ தலைநகருக்கு மாபெரும் அச்சறுத்தலாக மாறியுள்ளது. மேலும் ஸ்பெயினின் சில பகுதிகளிலும், பிரான்சின் தென் பகுதியின் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான அடர்ந்த காடுகள் தீயில் முற்றிலும் சாம்பலாகியுள்ளன. மேலும் தீ அதிவேகமாக குடியிருப்புப் பகுதிகளை நெருங்குவதால், மக்களும் ராணுவத்தின் உதவியுடன் அவசரம் அவசரமாக மீட்கப்பட்டுப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் ஸ்பெயின் மற்றும் பிரான்சில் 2.20 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசுகள் கூறியுள்ளன.

தீயை அணைக்க ராணுவம் வரவழைக்கப்பட்டு அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமாக வான்வழியாகத் தண்ணீர் ஊற்றித் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எனினும் காற்றின் வேகம் மற்றும் வெப்ப அலை காரணமாக காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு துறையினர் தடுமாறி வருகின்றனர். இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளின் உதவி கோரப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குரோஷியா, போர்ச்சுகல், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தீயை அணைக்க பெரிய அளவிலான விமானங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.