உலகம்

காபூல் விமான நிலையம் அருகே இரட்டை குண்டு வெடிப்பு: 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு?

JustinDurai
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், விமான நிலையம் அருகே நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. அமெரிக்கப் படையினர் 12 பேரும் பலியாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து வெளியேற காபூலில் உள்ள விமான நிலையத்தை ஆப்கானியர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர். இந்நிலையில், விமான நிலையம் அருகே ஒரு வெடிகுண்டும், அடுத்த சில நிமிடங்களில் அருகில் உள்ள ஹோட்டலிலும் மற்றொரு குண்டும் வெடித்தது. இதில் ஆப்கானியர்கள் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலில், அமெரிக்க மாலுமிகள் 11 பேரும், கடற்படை மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துவிட்டதாக பென்டகன் தெரிவித்திருக்கிறது.
விமான நிலையம் அருகே நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள நிலையில், அந்த அமைப்பும் அதனை உறுதி செய்துள்ளது. நிலைமை மோசமடைந்தாலும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பணிகளை நிறுத்தப் போவதில்லை என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.