தென்கிழக்கு சீனாவைச் சேர்ந்த கியாவோ என்ற நபர், பழைய சிம் கார்டுகளிலிருந்து 191 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த செயல்முறை ஆபத்தானது மற்றும் சட்டவிரோதமானது என்பதால், பொதுமக்கள் இதை முயற்சிக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.
செய்தியாளர் - திவ்யா
இதுவரை வரலாறு கண்டிராத அளவு தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சத்து 34ஆயிரத்தை கடந்து நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகி உள்ளது. கடந்த 29ஆம் தேதி ஒரு கிராம் 16,800 ரூபாய் வரை உயர்ந்து, ஒரு சவரன் 1,34,400 ரூபாய் என்ற வரலாறு காணாத உச்சத்திற்கு சென்றது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தங்கம் விலை சரிந்து கொஞ்சம் ஆறுதல் கொடுத்தாலும், பொதுமக்கள் தங்கம் விலை ஏற்றத்தால் கடும் குழப்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இனி தங்கத்தை வாங்கமுடியுமா என்ற கவலையிலும் ஆழ்ந்துவருகின்றனர்.
இந்த நிலையில் தான், தூக்கி எறியப்பட்ட சிம் கார்டுகளிலிருந்து 191 கிராம் தூய தங்கத்தை பிரித்தெடுக்கும் வீடியோவைப் ஒருவர் பகிர்ந்தது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன விவரம் என பார்க்கலாம்.
தென்கிழக்கு சீனாவைச் சேர்ந்த ஒரு நபர் பழைய சிம் கார்டுகளிலிருந்து தங்கத்தை எவ்வாறு பிரித்தெடுத்தார் என்பதைக் காட்டி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். இது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகளை ஆன்லைனில் வாங்குவதற்கான அவசரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த நபர் இந்த செயல்முறை ஆபத்தானது என்றும் சாதாரண மக்கள் இதை முயற்சிக்கக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் "கியாவோ" என்று அழைக்கப்படும் அந்த நபர், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஹுய்சோவைச் சேர்ந்தவர். அவர் கழிவுகளிலிருந்து விலைமதிப்பற்ற உலோகங்களைப் பிரித்தெடுத்து சுத்திகரிக்கும் பணியில் (precious scrap metal refining) ஈடுபட்டுள்ளார். அவர்வெளியிட்ட வீடியோ ஒன்று ஐந்து மில்லியன் பார்வைகளைப் பெற்று கவனம் பெற்றுள்ளது.
அந்த வீடியோவில், கியாவோ பழைய சிம் கார்டுகளை ரசாயனங்கள் நிரப்பப்பட்ட டிரம்களில் வைக்கிறார். அரிப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் வெப்பமாக்கல் போன்ற பல நிலைகளுக்குப் பிறகு, அவர் தங்கம் போன்ற சேற்றைப் பிரித்தெடுத்தார். பிறகு அதனை வடிகட்டி சூடாக்கிய பிறகு, இறுதியாக அவருக்கு 191 கிராம் தங்கம் கிடைத்தது. அதன் மதிப்பு தோராயமாக 200,000 யுவான் ஆகும். இந்திய மதிப்பில் 26 லட்சத்திற்கும் மேல் இருக்கும். இந்த தங்கத்தைப் பெற சுமார் இரண்டு டன் ஸ்கிராப்பைப் பயன்படுத்தியதாக கியாவோ தெரிவித்து இருக்கிறார்.
ஸ்கிராப் என்பது வெறும் சிம் கார்டுகள் மட்டுமல்ல, தொலைத்தொடர்பு மின்னணுத் துறையிலிருந்து வரும் பல்வேறு சிப் கழிவுகளின் கலவை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். சிம் கார்டுகளின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் அரிப்பு எதிர்ப்பை உறுதி செய்வதற்காக அவற்றின் முக்கிய பாகங்கள் தங்கத்தால் பூசப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கினார்.
மேலும், ஒரு சிம் கார்டில் 0.001 கிராமுக்கும் குறைவான தங்கம் மட்டுமே உள்ளது. சில வகையான மின்னணு கழிவுகளை தேவையான சான்றிதழ்களுடன் சட்டப்பூர்வமாக செயலாக்குவதாகவும், தனது அறிவையும் திறமையையும் பகிர்ந்து கொள்வதே தனது நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
சாதாரண மக்கள் இதுபோன்ற ஒரு செயல்முறையை முயற்சிக்கக்கூடாது என்று அவர் எச்சரித்தார். ஏனெனில் இது மிகவும் ஆபத்தானது மற்றும் சட்டவிரோதமானது எனவும் கூறி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானவுடன், பழைய சிம் கார்டுகளை வாங்குவதற்கான போட்டி இரண்டாம் நிலை தளங்களில் சூடுபிடிக்க தொடங்கியது.
தங்கம் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு இருக்கும் நிலையில், இந்த வீடியோ தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஆனாலும் இதன் உண்மைத்தன்மை என்ன, இது ஆபத்தானது மற்றும் சட்டவிரோதமானது போன்ற விஷயங்களையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.