உலகம்

ஒரே நேரத்தில் ஆல்பா, பீட்டா வகை பாதிப்பு - குழப்பத்தை ஏற்படுத்திய பெல்ஜியம் பெண்ணின் மரணம்

Sinekadhara

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றால் இறந்த 90 வயது பெண் ஒருவர் ஆல்பா மற்றும் பீட்டா வகை வைரஸ்களால் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பெல்ஜியத்திலுள்ள ஆல்ஸ்ட் நகரிலுள்ள OLV மருத்துவமனையில் மார்ச் 3ஆம் தேதி ஒரு பெண்மணி கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் வீட்டிலேயே இருந்து சிகிச்சை எடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் அவருடைய ஆக்சிஜன் அளவு சீராக இருந்தபோதிலும், அடுத்தடுத்த நாட்களில் நிலைமை மோசமாகி 5 நாட்களில் இறந்துவிட்டார்.

அந்தப் பெண்ணுக்கு ஆல்பா மற்றும் பீட்டா வகை வைரஸ்கள் இரண்டும் தாக்கியிருந்ததை மருத்துவர்கள் சோதனையில் கண்டறிந்திருக்கின்றனர். ஆல்பா வகை பிரிட்டனிலும், பீட்டா வகை தென் ஆப்பிரிக்காவிலும் பரவி வந்த நேரத்தில், பெல்ஜியத்தில் இருந்த பெண்ணுக்கு இரண்டு வகை பாதிப்புகளும் இருந்தது மருத்துவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இதுபற்றி மூலக்கூறு உயிரியலாளர் ஆனி கூறுகையில், ‘’பெல்ஜியத்தில் ஆல்பா மற்றும் பீட்டா வகைகள் பரவிய நேரத்தில் இந்த பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆல்பா மற்றும் பீட்டா வகைகளால் பாதிக்கப்பட்டிருந்த இருவேறு நபர்களிடமிருந்தும் இந்த பெண்ணுக்கு தொற்று பரவியிருக்கிறது. ஆனால் இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. அதேசமயத்தில் இருவேறு வகைகளும் ஒரே உடலில் எவ்வாறு வேகமாக பரவியிருக்கும் என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன’’ என்று கூறியிருக்கிறார்.