மேற்கு ஆசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால், வளைகுடா நாடுகளில் வசிக்கும் 90 லட்சம் இந்தியர்கள் அச்சத்தில் உள்ளனர். இவர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்திய தூதரகங்கள் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்துள்ளன.
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலானமோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் வசிக்கும் 90 லட்சத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இவர்களில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களும் அடங்குவர். ஐக்கிய அரபு அமீரகம், சவுதி, குவைத் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. எண்ணெய் வளம் மிகுந்த இந்த நாடுகளில் எண்ணெய் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், மருத்துவம், சுற்றுலா ஆகிய துறைகளில் பெரும்பாலான இந்தியர்கள் பணியாற்றுகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 6.7 லட்சம் தமிழர்கள் உட்பட 35.7 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். சவுதி அரேபியாவில் 4.6 லட்சம் தமிழர்கள் உட்பட 24.6 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். கத்தாரில் 1.7 லட்சம் தமிழர்கள் உட்பட 8.3 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். குவைத்தில் 1.95 லட்சம் தமிழர்கள் உட்பட 9.95 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். ஈராக்கில் 3,000 தமிழர்கள் உட்பட 17,400 இந்தியர்கள் வசிக்கின்றனர்.
பஹ்ரைனில் 70,000 தமிழர்கள் உட்பட 3.2 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். ஓமனில் 1.3 லட்சம் தமிழர்கள் உட்பட 6.8 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்துள்ளது.