உலகம்

சர்ச் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 9 பேர் பலி

rajakannan

பாகிஸ்தானில் சர்ச் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா நகரிலுள்ள சர்ச் ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான இன்று ஆலயத்தில் 400-க்கும் மேற்பட்டோர் வழிபாடு செய்து கொண்டிருந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் தேவாலயத்தில் நடைபெற்று கொண்டிருந்தன.

வழிபாடு நடந்து கொண்டிருக்கும் போது, நுழைவாயில் அருகே உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு வந்த ஒருவர் அதனை வெடிக்கச் செய்தார். இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் மற்றொருவர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார். இந்த இரண்டு தாக்குதலில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீது தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. 2015-ம் ஆண்டு லாகூரில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.