உலகம்

ரஷ்ய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு - 8 பேர் பலி

Sinekadhara

ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தினுள் மாணவர் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1,300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள PERM நகரில் செயல்பட்டு வரும் அரசு பல்கலைக்கழகத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. திடீரென பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்த ஒருவர், மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அப்போது செய்வதறியாமல் திகைத்த மாணவர்கள் பலர், ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பி ஓடும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனிடையே தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் என தெரிய வந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 10க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரின் பெயர் தைமூர் பெக்மன்சுரோவ் என்றும், தான் ஒரு அரசியல்வாதியோ அல்லது பயங்கரவாதியோ அல்ல என்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக ரஷ்யா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.