உலகம்

மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு - 70 பேரின் கதி என்ன?

Sinekadhara

மியான்மர் நாட்டில் பச்சை மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 70 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மர் நாட்டில் பகந்த் என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலைசெய்த 70பேரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோதமாக சுரங்கப்பணிகள் நடைபெற்றதால் அங்கு எவ்வளவு பேர் பணிபுரிந்தனர் என்ற விவரம் சரியாக தெரியவில்லை.

அருகிலிருந்த ஏரியிலிருந்து அடித்துவந்த தண்ணீர் சுரங்கப்பகுதியில் இருந்த கழிவுகளுடன் கலந்து அதில் தொழிலாளர்கள் சிக்கியிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. காலை 7 மணிமுதல் அந்த இடத்தில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

பகந்த் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தில் ஏற்கெனவே 2020-இல் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 200 பேர் இறந்தனர். தற்போது விபத்து ஏற்பட்ட சுரங்கமே, உலகளவில் பச்சை மாணிக்க கற்கள் அதிகமாக வெட்டியெடுக்கப்படும் இடமாகும்.