உலகம்

ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாடி ரூ.11 லட்சம் செலவிட்ட 6 வயது சிறுவன்: அதிர்ந்துபோன தாய்!

webteam

அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன் ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாடி 11 லட்சம் ரூபாயை வீணாக்கியதால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

நியூயார்க்கைச் சேர்ந்த ஜெஸ்சிகா ஜான்சனுக்கு, ஜார்ஜ் ஜான்சன் என்ற 6 வயது மகன் உள்ளார். ஜெஸ்சிகா வீட்டில் இருந்து வேலை பார்ப்பதும், அவரின் குறும்புக்கார மகன் ஜெஸ்சிகாவின் செல்போனில் கேம் விளையாடுவதும் வாடிக்கை. கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் தனது கணக்கில் இருந்து 25 முறை பணம் எடுக்கப்பட்டது ஜெஸ்சிகாவுக்கு தெரியவந்துள்ளது. மொத்தமாக 2500 டாலர்கள் எடுக்கப்பட்டது. வங்கிக்கணக்கில் ஏதேனும் மோசடி நடைபெறுவதாக நினைத்த ஜெஸ்சிகா வங்கியில் புகார் அளித்துள்ளார்.

ஜூலை மாத இறுதியில் அவர் கணக்கில் இருந்து 16,293 டாலர்கள் எடுக்கப்பட்டது. இதனை அடுத்து வங்கியின் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். அதன்பின்னர்தான் தெரியவந்துள்ளது இதற்கு காரணம் வங்கி மோசடி அல்ல. தன்னுடைய மகன் விளையாடிய கேம்தான் என்று. மகன் விளையாடியது ஆப்பிள் நிறுவனம் தொடர்புடைய கேம் என்பதால், ஆப்பிள் நிறுவனத்தை தொடர்புகொண்டு தகவல் கேட்டுள்ளார் ஜெஸ்சிகா. அதன்படி,

ஜெஸ்சிகாவின் 6 வயது மகன் ஜார்ஜ், ஐபேடில் உள்ள சோனிக் போர்ஸ் என்ற கேம் விளையாடியதும் அதில் வழங்கப்படும் கோல்டு காயின்ஸை பெறுவதற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டதும் தெரியவந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக பணம் எடுக்கப்பட்டு மொத்தமாக இந்திய மதிப்பில் 11 லட்சம் வரை ஜெஸ்சிகா பணத்தை இழந்துள்ளார். உடனடியாக நடந்தவிவரத்தை ஆப்பிள் நிறுவனத்திற்கு புகாராக தெரிவித்துள்ளார். ஆனால் இரண்டு மாதத்துக்கு மேல் சென்றுவிட்டதால் பணத்தை திருப்பித் தர முடியாது என கைவிரித்துவிட்டது ஆப்பிள் நிறுவனம்.

இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டியுள்ள தாய் ஜெஸ்சிகா, விளையாட்டில் வரும் பணம் நிஜ பணம் என என் மகனுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவன் சிறுவன். விளையாட்டுப்பையன் என தெரிவித்துள்ளார். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென ஆப்பிள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. “எங்களுடைய தயாரிப்புகளில் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உங்களது வங்கிக்கணக்குகளை சரியாக லாக் செய்து வைக்க ஆப்ஷன்கள் உள்ளன. குழந்தைகள் பயன்படுத்தும் நிலை இருந்தால், வங்கிக் கணக்குகளை முறையாக லாக் செய்து வைக்கலாம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.