உலகம்

ஒரே ஆண்டில் 44 லட்சம் புற்றுநோய்க்கு மரணம்... அதிர்ச்சி தகவல்

ச. முத்துகிருஷ்ணன்

கடந்த 2019-ஆம் ஆண்டு புகைபிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்டவைகளால் புற்றுநோய் ஏற்பட்டு உலகளவில் 44 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து லான்செட் இதழ் நடத்திய ஆய்வில், மொத்த புற்றுநோய் மரணங்களில் 36.9 விழுக்காட்டினர் சிகரெட் பிடிப்பதால் இறப்பதாகவும், கர்ப்பப்பை வாய் புற்று நோயால் 17.9 விழுக்காட்டினரும், பெருங்குடல் புற்று நோயால் 15.8 விழுக்காட்டினரும், மார்பக புற்று நோயால் 11 விழுக்காட்டினரும் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் 44 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள 5 பிராந்தியங்களில்தான் புற்றுநோய் இறப்பு அதிகமாக உள்ளது. மத்திய ஐரோப்பாவில் ஒரு லட்சம் பேருக்கு 82 இறப்புகள், கிழக்கு ஆசியாவில் லட்சத்துக்கு 69.8, வட அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கு 66.0, தென் அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கு 64.2, மேற்கு ஐரோப்பாவில் ஒரு லட்சத்துக்கு 63.8 இறப்புகளும் ஏற்படுகின்றன என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் மருத்துவ துறை இயக்குநர் கிறிஸ்டோபர் முர்ரே “ஆண்கள், பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கு புகைப்பிடிப்பதுதான் முக்கிய காரணம். அதை தொடர்ந்து மது அருந்துவது, உடன் பருமன் ஆகியவையும் காரணம் என தெரிய வந்துள்ளது” என்று கூறினார்.