அமெரிக்காவில் இறந்தவர்கள்
அமெரிக்காவில் இறந்தவர்கள் PT
உலகம்

மீண்டும் அதிர்ச்சி! கணவன்,மனைவி, 2 குழந்தைகள் சடலமாக மீட்பு! அமெரிக்காவில் தொடரும் இந்தியர்கள் மரணம்

Jayashree A

இந்த ஆண்டு தொடக்கம் முதல் அமெரிக்காவில் இந்தியர்கள் பலர் மர்மமான முறையில் இறந்து வருகிறார்கள். கடந்த வாரம் இந்தியாவைச்சேர்ந்த 4 பேர் இறந்துள்ள நிலையில் நேற்று மேலும் 4 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஆனந்த் சுஜித் ஹென்றி (42), இவரது மனைவியான ஆலிஸ் பிரியங்கா (40) இருவரும் கலிபோரியாவின் சான் மேடியோவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வசித்து வந்தார்கள். இவர்களுக்கு 4 வயதில் இரட்டை குழந்தைகள் இருந்தனர்.

ஆனந்த் கலிபோரியாவில் ஒரு மென்பொருள் பொறியாளராகவும் பிரியங்கா மூத்த ஆய்வாளராகவும் பணியாற்றி வந்தார்கள். முதலில் இவர்கள் நியூ ஜெர்சியில் இருந்ததாகவும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் சான் கேடியோ கவுண்டிற்கு குடிவந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நேற்று கலிபோர்னியாவின் சான் மேடியோவில் உள்ள அவர்களது வீட்டிற்குள், நான்கு பேரும் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது.

இதில் இருவர் உடலில் குண்டு பாய்ந்து இறந்ததாகவும், மற்ற இருவர் எப்படி இறந்தார்கள் என்று தெரியாத நிலையில் போலிசார் இந்த வழக்கை, தற்கொலையா அல்லது கொலையா என்ற இருவேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் ஆனந்த் வீட்டில் அருகில் இருக்கும் அண்டை வீட்டினரிடம் போலிசார் விசாரித்ததில், ஆனந்த் குடும்பத்தினரைப் பற்றி நல்லவிதமாக சொல்லி இருக்கிறார்கள்.

அடுத்ததாக, உறவினரிடம் விசாரித்ததில், கடந்த சில நாட்களாக ஆனந்திற்கும் அவரது மனைவிக்கும் தலைவலி மற்றும் சாதாரண குமட்டல் போன்ற உடல் உபாதைகள் இருந்ததாகவும், அதனால், ஆனந்த் வீட்டில் இருக்கும் ஏர் கண்டிஷனர் அல்லது ஹீட்டரில் இருந்து கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் வெளிவந்ததால் இறப்பு ஏற்பட்டிருக்ககூடும் என்று உறவினர் சந்தேகத்தை எழுப்பி இருந்தனர்.

உறவினர்களின் சந்தேகத்தின் அடிப்படியில் போலிசார் சோதனை மேற்கொண்டதில், வீட்டில் எரிவாயு கசிவு அல்லது சாதனங்கள் பழுதடைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இறப்புக்கான காரணம் தெளிவாக தெரியாதநிலையில், பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் பகுப்பாய்வின் முடிவுகளுக்காக காவல்துறை காத்திருக்கிறது.

மேலும், இந்த வழக்கை தீர்க்க உதவும் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கும்மாறு பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து அமெரிக்காவில் இந்தியர்கள் மர்மமான முறையில் இறந்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.