கச்சா எண்ணெய் வளத்தில் வெனிசுலா முதலிடத்தில் உள்ளது. 2025இல் வட அமெரிக்கா உலகின் மிகப்பெரிய உற்பத்தி பிராந்தியமாக மாறி, மத்திய கிழக்கின் ஆதிக்கத்தை மாற்றியுள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை மீட்க அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகள் உலக சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் கச்சா எண்ணெய் கையிருப்பில், வெறும் 4 நாடுகள் மட்டுமே உலகின் பாதிக்கும் மேலான வளத்தைக் கொண்டுள்ளன. இதில் 303 பில்லியன் பேரல்களுடன் வெனிசுலா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா 267 பில்லியன் பேரல்களுடன் இரண்டாவது இடத்திலும், ஈரான் 209 பில்லியன் பேரல்களுடன் மூன்றாவது இடத்திலும், கனடா 163 பில்லியன் பேரல்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. ஈராக் 145 பில்லியன் பேரல்களுடன் 5ஆவது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் 107 பில்லியன் பேரல்களுடன் 6ஆவது இடத்திலும் உள்ளன.
உற்பத்தியைப் பொறுத்தவரை, 2025இல் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்திவந்த மத்திய கிழக்குப் பகுதியை பின்னுக்குத் தள்ளி, வட அமெரிக்கா உலகின் மிகப்பெரிய உற்பத்தி பிராந்தியமாக உருவெடுத்துள்ளது. தினசரி 31 மில்லியன் பேரல்களை உற்பத்தி செய்து, உலக விநியோகத்தில் சுமார் 30 சதவீதத்தை வட அமெரிக்கா தன்வசம் வைத்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், வெனிசுலாவின் பிரம்மாண்ட எண்ணெய் வளத்தை மீட்க அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகள், வரும் காலங்களில் உலகச் சந்தையில் மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.