உலகம்

சிரியாவில் மீண்டும் வான்வெளி தாக்குதல்: 34 பேர் பலி

rajakannan

சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். 

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக்குழுக்கள், ராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் அதிபர் ஆதரவு படையினர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.

இந்தப் போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் 700 பேர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 166 பேர் குழந்தைகள் என்று பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் மீண்டும் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 34 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதில் 11 பேர் குழந்தைகள். கவுட்டாவின் முக்கிய நகரமான டவுமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 26 பேர் உயிரிழந்தனர்.  சிரியாவில் செயல்படும் மனித உரிமை கண்காணிப்பு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.