உலகம்

படகில் 4வயது மகன்; ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட நடிகையின் உடல்.. போலீசார் தீவிர விசாரணை!!

webteam

5 நாட்களுக்கு முன் காணாமல் போன அமெரிக்க நடிகையின் உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது

கலிபோர்னியாவைச் சேர்ந்த நடிகை நய ரிவேரா கடந்த புதன்கிழமையில் இருந்து காணாமல் போனார். அவரது 4 வயது மகன் கலிபோர்னியாவின் உள்ள ஆற்றில் ஒரு படகில் அமர்ந்திருந்தான். அவனை மீட்ட போலீசார் காணாமல் போன நடிகை குறித்து விசாரணையை தொடங்கினர். 33 வயதான நடிகை எங்கு சென்றார். யாரேனும் கடத்திச் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அதேவேளையில் அந்த ஆற்றிலும் உடலை தேடத் தொடங்கினர். 5 நாட்களாக தேடப்பட்ட நிலையில் இன்று நடிகையின் உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.

இது குறித்து தெரிவித்துள்ள போலீசார் தற்கொலைக்கான தடயமும் இல்லை, வெளி ஆட்கள் கடத்திச் சென்றதற்கான சாத்தியக் கூறுகளும் குறைவாகவே இருந்தன. அதனால் நிச்சயம் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என தீர்மானித்தோம். தற்போது உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் தற்கொலையாகவோ அல்லது கொலையாகவோ இருக்க வாய்ப்பில்லை எனவும், நடிகையின் மகன் அங்கு படகில் இருந்துள்ள நிலையில் இது விபத்தாகவே இருக்குமென தெரிவித்துள்ளனர். ஆனாலும் உடற்கூறாய்வுக்கு பிறகே தெளிவான விளக்கத்தை அளிக்க முடியுமென்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மகனிடம் நடத்திய விசாரணையில் தான் திரும்பி பார்க்கும் போது தன்னுடைய தாய் நீரில் மூழ்கிக்கொண்டு இருந்ததாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளான். ஆபத்தில் சிக்கிய மகனை காப்பாற்றிவிட்டு நடிகை நீரில் மூழ்கி இருக்கலாம் என போலீசார் யூகிக்கின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.