உலகம்

தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்: மர்மமான இலங்கை மன்னார் மனித புதைகுழி!

webteam

இலங்கை மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் 300 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் வட மேற்கு நகரான மன்னாரில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கட்டட பணிக்காக நிலம் தோண்டப்பட்டது. அப்போது நிலத்தை தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து அப்பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த பகுதி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கைக்குச் சென்றது. அப்பகுதியில் எலும்புக்கூடுகள் மட்டுமின்றி உலோக பொருட்கள், இறந்தவர்களின் ஆபரணங்கள் என பல பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் வருவதாகவும், இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகூடுகளின் எண்ணிக்கை 300 ஐ கடந்துள்ளது என்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சி குறித்து பேசிய சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச, ''130 நாட்களை‌ கடந்து நடக்கும் அகழ்வுப்பணியில், இதுவரை 300 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 294 எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை, ஆய்வுக்காக வருகிற 23 ஆம்தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு அனுப்பி வைக்க உள்ளோம். அதுவரை அவை நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும்’’ என்று தெரிவித்தார். 

தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் வருவது ஆராய்ச்சியாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எலும்புக்கூடுகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் முடிவு வந்தால் தான் முழு விவரம் தெரியவரும் என்றும் அதுவரை இந்த அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்