கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி சீனாவுக்கு சொந்தமான திபெத் பகுதியில் இருந்த மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று தனது கடின தன்மையை இழந்து உடைந்தது. தொடர்ந்து அந்த நீர் நிலச்சரிவால் ஒரே இடத்தில் தேங்கி பின்னர் மொத்தமாக ஒரே நேரத்தில் வெளியேறியது. இதன் காரணமாக சுனாமி வேகத்தில் வந்த வெள்ள நீர், போதேகோஷி (Bhote Koshi) மற்றும் திரிசூலி ஆற்றின் வழியாக நேபாளத்துக்குள் பாய்ந்தது.
பல மீட்டர் தூரம் உயரத்துக்கு வந்த இந்தப் பெருவெள்ளம் காரணமாக நேபாளத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 1200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக திரிசூலி ஆற்றுப்படுகையில் இருந்த நீர்மின் நிலையங்கள் கடுமையான சேதமடைந்தன. குறிப்பாக, திரிசூலி-3ஏ (Trishuli 3A) மற்றும் மேல் திரிசூலி (Upper Trishuli) திட்டங்களின் சுரங்கப் பாதைகளில் வெள்ளம் கொண்டுவந்த மணல், சேறு மற்றும் இடிபாடுகள் வேகமாக நுழைந்ததால் அங்குப் பணியில் இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் உள்ளேயே முடங்கினர்.
சுமார் 600க்கும் அதிகமான தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களை பத்திரமாக வெளியேற்றும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். சேற்றை வேகமாக வெளியேற்ற உயர் திறன் கொண்ட தொழில்துறை பம்புகள் மற்றும் சுரங்கப் பாதையின் நிலைமையை அறியச் சிறப்பு ரேடார்கள், வெப்ப வரைபடக் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் 300க்கும் அதிகமான தொழிலாளர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், உள்ளே சிக்கி இருப்போரை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுரங்கப் பாதைகளுக்குள் ஆக்சிஜன் செலுத்துவதற்கான குழாய்களை அமைக்கும் பணிகளும் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்தச் சம்பவம் நடைபெற்று 9 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், உள்ளே இருப்பவர்களில் எத்தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனினும், உள்ளே சிக்கியுள்ளவர்கள் அனைவரும் மீட்கப்படும் வரை மீட்புப்பணி தொடரும் என நேபாள பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் நேபாளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.