உலகம்

குவியும் குப்பைகளால் பாதிப்படையும் எவெரெஸ்ட்: சுத்தம் செய்யும் பணியில் நேபாள அரசு

குவியும் குப்பைகளால் பாதிப்படையும் எவெரெஸ்ட்: சுத்தம் செய்யும் பணியில் நேபாள அரசு

webteam

உலகின் உயரமான சிகரமாக இமயமலையில் உள்ள எவெரெஸ்ட் சிகரம் கருதப்படுகிறது. கடல்மட்டத்துக்கு மேல் 8,848 மீட்டர்கள் (29,028 அடி) உயரம் கொண்டது. த்ரில் அனுபவங்களை விரும்பும் மலையேற்றவீரர்களின் கனவாக எவெரெஸ்ட் இருக்கிறது. ஒரு முறையாவது எவெரெஸ்ட்டில் ஏறிவிட வேண்டுமென்பதே சாகச விரும்பிகளின் கனவு. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்களும் அவர்களுக்கு உதவியாக உள்ளூர் ஷெர்பாக்களும் செல்கின்றனர்.

இப்படி மலையேறுபவர்கள்  ஆக்ஜிசன் குடுவை, மதுபாட்டில்கள், உணவுப் பொட்டல வகைகள், மருத்துவ பொருட்கள் என பல பொருட்களை கையோடு எடுத்துச் செல்கின்றனர். ஆனால் அவற்றை பயன்படுத்திவிட்டு அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர். இதனால் எவெரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எவரெஸ்டை சுத்தம் செய்யும் பணியை நேபாள அரசு தொடங்கியுள்ளது. அரசு சாரா அமைப்புகள் உதவியுடன் ஏப்ரல் 14ம் தேதி இந்த பணியை தொடங்கியுள்ளது. 45 நாட்கள் திட்டத்துடன் தொடங்கப்பட்ட இந்த பணியில் சுமார் 10 ஆயிரம் கிலோ குப்பைகளை சேகரிக்க வேண்டுமென்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய நேபாள சுற்றுலாத்துறை இயக்குநர் கிம்ரே, ''இந்த பணிக்காக நேபாள மதிப்பில் 23 மில்லியன் ரூபாய் செலவழிக்க உள்ளோம்.எவரெஸ்டின் அடிவார முகாமிலேயே 4 உடல்களை கண்டெடுத்தோம். அதுபோக 3000கிலோ குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. எவெரெஸ்ட் உலகத்தின் மகுடம் மட்டுமல்ல. நமது பெருமை. அதனை சுத்தமாக வைத்துக்கொள்வதே நமது இலக்கு. மலையேறுபவர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இது சாத்தியம்'' என தெரிவித்துள்ளார்.

மேலும், ''சேகரிக்கப்படும் குப்பைகள் சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதி காத்மண்டுவில் காட்சிக்கு வைக்கப்பட்டு பின்னர் மறுசுழற்சி செய்யப்படும்'' என்றும் தெரிவித்துள்ளார்.