இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு பலியானோர்களின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவில் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே சுந்தா ஜலசந்தி உள்ளது. அங்கு அமைந்துள்ள அனக் கிரகட்டாவ் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடலுக்கு அடியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட சுனாமியால் அந்த நாட்டில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. ஜாவா தீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டான்ஜங் லீசங் கடற்கரை உல்லாச விடுதி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் உருக்குலைந்தன. அங்குள்ள பெண்டக் லங்க், செரங், தெற்கு லம்புங் ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதில் பலர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக பேரிடர் முகமை தகவல் தெரிவித்துள்ளது. பல பேர் மாயமாகி உள்ளதால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன.