பிரான்சில் நாடு தழுவிய அளவில் அனைத்தையும் தடுப்போம் (Block Everything) எனும் முழக்கத்தோடு வீதிகளில் இறங்கி மக்கள் போராடி வரும் நிலையில், இதுவரை 200க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில், முந்தைய பிரதமர் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல் மற்றும் ஓய்வூதியங்களை முடக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரான்சுவா பேய்ரூ தோல்வியுற்றார். இதனையடுத்து பிரான்சுவா பேய்ரூ பதவி விலகிய நிலையில் அதிபர் இம்மானுவல் மேக்ரான் தனது ஆதரவாளர் செபாஸ்டியன் லெகார்னுவை பிரதமராக அறிவித்தார்.
இந்த நிலையில், செபாஸ்டியன் லெகார்னுவை பிரதமராக அறிவித்தை எதிர்த்து, ஏற்கனவே சமூக ஊடகங்களில் பரவிவந்த “அனைத்தையும் தடுப்போம்” பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள், புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகார்னுவை நியமித்தது எந்த வகையிலும் நாட்டின் சமத்துவமின்மையைக் குறைக்காது எனக்கூறி நேற்று(புதன் கிழமை) பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் கூடினர்.
அப்போது, சாலைகளை மறுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ரயில் போக்குவரத்தும் போராட்டத்தால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த போராட்டத்தை தடுக்க புதிதாக பதவியேற்ற செபாஸ்டியன் லெகார்னு அரசு 80,000 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியது. தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து , போராட்டத்தால் நாடு முழுவதும் 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் குறித்து, பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் புரூனோ ரெட்டைல்லோ தெரிவிக்கையில், ரென்னெஸ் நகரில் ஒரு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது என்றும், போராட்டக்காரர்கள் மின்சார கம்பிகளை சேதப்படுத்தியுள்ளதால், பிரான்சின் தென்மேற்கு பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, போராட்டக்காரர்களின் இந்த செயல் நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.
நேபாளத்தில், இளைஞர்கள் போராட்டம் நடத்தி ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில், பிரான்ஸ் நாட்டின் அரசுக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது