உலகம்

சென்னையிலிருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து

சென்னையிலிருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து

webteam

கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு 59 பன்னாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிவதற்காக சென்னைக்கு வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்காக 15 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இருக்கிறதா என்று மருத்துவக் குழுவினர் சோதனை நடத்துகின்றனர்.

அதுபோன்ற பாதிப்புகள் ஏதேனும் இருந்தால் அந்த நபர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். மருத்துவப் பரிசோதனை மட்டுமின்றி சென்னைக்கு வரும் விமானப் பயணிகளின் விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இதுதவிர விமான நிலையத்தை தூய்மையாக வைத்திருக்கவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பயணிகள் கை வைக்கும் இடங்களான கைப்பிடிகள், கழிவறைக் குழாய்கள், எஸ்கலேட்டர்கள், பெட்டிகளை வைத்து எடுத்துச் செல்லும் டிராலிகள் ஆகியவை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் இருந்து குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் பயணிகள் வருகை குறைவானதையடுத்து இந்த நடவடிக்கையை விமான நிறுவனங்கள் எடுத்துள்ளன